மனு கொடுப்பதற்காக முதல்வர் கார் முன்பு "குபீரென" பாய்ந்த தொண்டரால் பரபரப்பு
சென்னை: சென்னையில் நேற்று முதல்வர் ஜெயலலிதா கார் முன்பு பாய்ந்த அ.தி.மு.க தொண்டரால் பரபரப்பு ஏற்பட்டது. சட்டசபை கூட்டத்தில் பங்கேற்க நேற்று காலை 10:30 மணிக்கு முதல்வர் ஜெயலலிதா அவரது இல்லத்தில் இருந்து புறப்பட்டார்.
தேனாம்பேட்டை, பின்னி சாலையில் அவரது கார் சென்ற போது சாலையோரம் நின்று கொண்டு இருந்த அ.தி.மு.க தொண்டர் ஒருவர், ஜெயலலிதாவின் காருக்கு முன்பு பாய்ந்தார். இதனால், முதல்வரின் கார் மற்றும் பாதுகாப்புக்காக உடன் வந்த அனைத்து கார்களும் ஒரு நிமிடம் ஸ்தம்பித்து நின்றன.

அருகில் இருந்த போலீசார் அவரை மடக்கிப் பிடித்தனர். மனு கொடுப்பதற்காக காருக்கு முன் சென்றதாக கூறினார். முதல்வரின் பாதுகாப்பு போலீசார் அவரிடமிருந்து மனுவைப் பெற்றுக் கொண்டனர். தேனாம்பேட்டை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அவர் பம்மல் அம்மா பேரவை துணைச் செயலர் கண்ணன் என்பது விசாரணையில் தெரியவந்தது.
கடந்த ஞாயிறன்று பம்மல் சங்கர் நகரில் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது, பம்மல் 2 ஆவது வார்டு அம்மா பேரவை செயலர் விக்ரம் பிரபு மற்றும், 1வதுவார்டு கவுன்சிலர் ஜெகன் ஆகியோர் கண்ணனை தாக்கியுள்ளனர். இதுகுறித்து, சங்கர் நகர் போலீசில் கண்ணன் புகார் செய்து இருக்கிறார்.
ஆனால், போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு கொடுப்பதற்காகத்தான் முதல்வர் கார் முன் பாய்ந்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது. கண்ணனின் இந்த திடீர் பாய்ச்சலால் பாதுகாப்பு போலீசார் பதற்றம் அடைந்தனர். இதனால் முதல்வர் சட்டசபை முடிந்து வீட்டுக்கு திரும்பும்போதும், பின்னி சாலையில் ஒருவரைக் கூட நிற்க அனுமதிக்கவில்லை.












Click it and Unblock the Notifications