தீபாவிற்கு ஆதரவாக புரட்சி மலர் தீபா பேரவை துவக்கம்... உண்ணாவிரதம்- அணி திரளும் அதிமுகவினர்
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை ஆதரித்து 'புரட்சிமலர் தீபா பேரவை' உதயமாகி உள்ளது. தீவிர அரசியலுக்கு வர வலியுறுத்தி அவரது ஆதரவாளர்கள் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளனர்
சென்னை: ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக பொது செயலாளராக பதவியேற்றுள்ள சசிகலாவிற்கு எதிராக தொண்டர்கள் பல்வேறு கருத்துக்களை கூறி வருகின்றனர். ஜெயலலிதா மறைவுக்கு பின் அவரது அண்ணன் மகள் ஜெ.தீபா தான் அதிமுகவிற்கு தலைமை ஏற்க வேண்டும் என, விரும்பி வருகின்றனர்.
தீபாவுக்கு ஆதரவாக, 'அம்மா ஜெயலலிதா தீபா பேரவை' என்ற பெயரில் பேரவை துவங்கி, 21 மாவட்டங்களுக்கு பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். பொள்ளாச்சி பகுதியிலும் தீபா பேரவை ஃளக்ஸ் போர்டுகள் வைக்க துவங்கியுள்ளனர்.
தீபா வசித்து வரும் சென்னை தியாகராய நகர் வீட்டை நாள்தோறும் முற்றுகையிட்டு வரும் தொண்டர்கள் உடனடியாக தீபா அரசியலுக்கு வரவேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். விரைவில் தனது முடிவை அறிவிப்பேன் என்று ஜெயலலிதா மறைந்த 30வது நாளில் தொண்டர்கள் மத்தியில் பேசிய தீபா கூறினார்.
புரட்சி மலர் தீபா பேரவை
ஏற்கனவே சேலத்தைச் சேர்ந்த தொண்டர்கள் தீபா பேரவை தொடங்கி அதில் 25 லட்சம் பேர் சேர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் ஜெ., அண்ணன் மகளை ஆதரித்து 'புரட்சிமலர் தீபா பேரவை' உதயமாகி உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் தீபாவுக்கு ஆதரவாக ஏராளமானோர் களம் இறங்க தயாராக உள்ளதாக புரட்சிமலர் தீபா பேரவை நிர்வாகிகள் கூறியுள்ளனர். எந்த அச்சுறுத்தலுக்கும் பயப்பட வேண்டாம், பொங்கல் திருநாள் அன்று கட்சியின் பெயர், சின்னம் ஆகியவை குறித்து அறிவிப்பு வெளியாகும் என உறுதியளித்துள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம்
திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் அ.தி.மு.க., தொண்டர்கள் அம்மா ஜெ.தீபா பேரவையை உருவாக்கி, உறுப்பினர் சேர்க்கும் பணியை துவக்கினர்.
இதற்காக படிவங்கள் அச்சிட்டு நத்தம் ஒன்றியத்தில் உள்ள 23 ஊராட்சிகளுக்கும் வினியோகம் செய்து வருகின்றனர். இதில் பெண்கள் உட்பட பலரும் ஆர்வத்துடன் இணைந்து வருகின்றனர்.
அதிகரிக்கும் போஸ்டர்கள்
நத்தம் தொகுதி அளவில் முக்கிய நிர்வாகிகளும் ஆதரவு தெரிவித்துள்ளதாக ஜெ. தீபா பேரவை அமைப்பாளர்கள் கூறியுள்ளனர். நத்தம் நகர், பண்ணுவார்பட்டி பகுதிகள், குட்டுப்பட்டியில் சாணார்பட்டி.மேட்டுக்கடை, கொசவபட்டி உள்ளிட்ட பகுதிகளில் தீபாவை ஆதரித்து பேனர்கள், போஸ்டர்கள் வைக்கப்பட்டுள்ளன.
உண்ணாவிரதம்
துாத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பகுதியில் ஜெ.தீபா பேரவை துவக்கப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் தீபாவை ஆதரித்து பேனர்களும் வைக்கப்பட்டுள்ளது. ஜெ.தீபா தீவிர அரசியலுக்கு வர வலியுறுத்தி, ஜெயலலிதாவின் 40 ம் நாள் நினைவு நாள் முதல், ஆறுமுகநேரி பகுதியில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என அதிமுக தொண்டர்கள் கூறி வருகின்றனர்.