பணத்திற்கு சீட் கொடுத்தாக அமைச்சர் மீது புகார் - வேட்பாளர்களுக்கு எதிராக அதிமுகவினர் போர்க்கொடி
கோவை: உள்ளாட்சி தேர்தலுக்காக ஜெயலலிதா அறிவித்துள்ள வார்டு கவுன்சிலர் வேட்பாளர் சிலருக்கு அதிமுகவிலேயே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பணத்தை பெற்றுக்கொண்டு அறிமுகமில்லாத நபர்களுக்கு சீட் கொடுத்தாக அமைச்சர் வேலுமணி மீது புகார் கூறியுள்ள தொண்டர்கள், கோவையில் கட்சி தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில் அதிமுக வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. உள்ளாட்சித் தேர்தலில், 12 மாநகராட்சி வார்டுகளில் போட்டியிடுபவர்களின் பெயர் பட்டியலையும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான பெயர் பட்டியலையும் ஜெயலலிதா வெளியிட்டார்.
வேட்பாளர் பட்டியல்
சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகளுக்கும், மதுரையில் 100 வார்டுகளுக்கும் வேட்பாளர்கள் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதேபோல், திருச்சியில் 65 வார்டுகளுக்கும், கோயம்புத்தூர் - 100, ஈரோடு - 60, சேலம் - 60, திருநெல்வேலி - 55, தூத்துக்குடி - 60, திருப்பூர் - 60, வேலூர் - 60, திண்டுக்கல் - 48 மற்றும் தஞ்சாவூர் - 51 ஆகிய 12 மாநகராட்சிகளிலும் உள்ள அனைத்து வார்டுகளுக்குமான வேட்பாளர் பட்டியலை அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
அதிமுகவினர் போராட்டம்
31 மாவட்டங்களுக்கான மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து, உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்ட மறுநாளே வேட்பாளர் பட்டியலை அறிவித்த ஒரே கட்சி அதிமுக மட்டுமே. இவ்வாறு அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் சிலரை மாற்றக் கோரி அக்கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவையில் போராட்டம்
கோவையில் அதிமுக தலைமை அலுவலகத்தை, அதிமுகவினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. கட்சிக்காக உழைத்தவர்களுக்கு உள்ளாட்சி தேர்தலில் வாய்ப்பளிக்காமல் பணத்தை வாங்கிக் கொண்டு சீட்டு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வேலுமணி மீது அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
உழைத்தவர்கள் புறக்கணிப்பு
விடிய விடிய சாலையில் அமர்ந்து போராடிய மகளிர் அணியினர், பால்குடம் எடுக்க நாங்க வேணும், மண்சோறு சாப்பிட நாங்க வேணும் ஆனா கவுன்சிலர் பதவிக்கு மட்டும் நாங்க வேண்டாமா? என்று கேட்டார். எங்க வார்டுக்கு யாருன்னே தெரியாத பெண்மணியை வேட்பாளராக அறிவித்துள்ளனர். அவருக்கு எங்களுடைய ஓட்டுக்களை போடமாட்டோம் என்று கூறினர்.
திண்டுக்கல்லில் போராட்டம்
திண்டுக்கலில் பணம் வாங்கிக் கொண்டு போட்டியிட வாய்ப்பு அளித்ததாக கூறி ஏமாற்றிய அதிமுக ஒன்றிய நிர்வாகியை கண்டித்து அதிமுகவினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கட்சியில் எந்த வித போராட்டத்திலும் பங்கேற்காத பலருக்கும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக அதிமுகவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
தொண்டர்கள் கொதிப்பு
வேட்பாளரை மாற்றக் கோரி சென்னை மேற்கு மாம்பளத்தில் தென் சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் கலைராஜன் அலுவலகத்தை மகளிர் அணியினர் நேற்று முற்றுகையிட்டனர். அதிமுக வேட்பாளர்களை மாற்றக் கோரி தமிழகம் முழுவதும் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. வேட்பாளர் பட்டியலில் முதல்வர் ஜெயலலிதாவின் கையெழுத்து இல்லாமலேயே வெளியாகியுள்ளதும் தொண்டர்களிடையே பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.