ஈவிகேஎஸ் இளங்கோவனை ரொம்பக் கேவலமாக விமர்சித்து போஸ்டர்கள்.. அடங்காத அதிமுகவினர்!
சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனை மிகக் கேவலமாக, இழிவாக, தரக்குறைவாக விமர்சிக்கும் வாசகங்களுடன் கூடிய போஸ்டர்களை அதிமுகவினர் சென்னையிலும் பிற இடங்களிலும் ஒட்டியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதிமுகவினர் ஒட்டியுள்ள இந்த போஸ்டர்களில் இடம் பெற்றுள்ள வாசகங்கள் மிக மிக மோசமாக உள்ளது. பார்ப்போர் முகம் சுளித்து வெறுப்பாக முகத்தைத் திருப்பிக் கொள்ளும் அளவுக்கு அகோரமாக இருக்கிறது.
இளங்கோவனுக்கு எதிரான போராட்டங்களை நிறுத்துங்கள் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியும் கூட அடங்காமல் அதிமுகவினர் ஒட்டியுள்ள இந்த போஸ்டர்களால் அதிமுகவுக்கும், முதல்வருக்கும்தான் கெட்ட பெயரைத் தேடிக் கொடுக்கும் என்பதை அதிமுகவினர் அறியாமல் போனதுதான் ஆச்சரியமாக உள்ளது.
ஒரு போஸ்டரில் இளங்கோவனை நாயே என்று திட்டியுள்ளனர். தமிழகத்தில் எங்குமே நடமாட விட மாட்டோம் என்று மிரட்டியுள்ளனர். ஜெயலலிதா காலில் இளங்கோவன் அமர்ந்து வணங்குவது போல போட்டோஷாப் வேலை செய்துள்ளனர்.
ஆயிரம் விளக்கு கே.சி. விஜய் என்பவர் ஏற்பாட்டின் பேரில் இந்த போஸ்டரைப் போட்டுள்ளனர். இந்த போஸ்டரில் அமைச்சர் பா. வளர்மதி, திருச்சி எம்.பி. குமார், சென்னை எம்.எல்.ஏ. வி.பி கலைராஜன் ஆகியோரது பெயர்களும் இடம் பெற்றுள்ளன.
அடுத்த போஸ்டர் இன்னும் மோசம். மதுரையைச் சேர்ந்த கிரம்மர் சுரேஷ் என்பவர் போட்டுள்ள போஸ்டர் இது. கூடி இனம் அழித்தோரையும், கொச்சைப்படுத்தா தமிழ் மண்ணில், தேச நலன் கருதி, நேசக் கரம் கூப்பும் சகோதரத்துவ சந்திப்பில், பாலினம் மட்டுமே காணும் இளங்கோவன் என்று கூறி எழுத்தில் கூற முடியாத வகையில் அவரைத் திட்டி வாசகம் வைத்துள்ளனர்.
இந்த போஸ்டரில் ராஜபக்சே சோனியா ஒரு படத்திலும், இன்னொரு படத்தில் பிரதமர் மோடி, முதல்வர் ஜெயலலிதா இருக்கும் படமும் இடம் பெற்றுள்ளது.
இப்படியா அறுவெறுப்பான முறையில் போஸ்டர்களைப் போடுவார்கள் அதிமுகவினர்.. என்று மக்கள் முகம் சுளிக்கிறார்கள்.