நான் 'கொள்ளை' பரப்புத் துணைச் செயலாளரா?.. தலையில் அடித்துக் கொண்டு புலம்பிய நாஞ்சில் சம்பத்
நாகர்கோவில்: நாகர்கோவில் வந்த அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நாஞ்சில் சம்பத்தை வரவேற்று போடப்பட்ட போஸ்டரில் கொள்ளை பரப்புச் செயலாளர் என்று ஸ்பெல்லிங் மிஸ்டேக்குடன் அச்சாகியிருந்ததைப் பார்த்து சம்பத் அதிர்ச்சி அடைந்தார்.
ஆரம்பத்தி்ல திமுகவில் இருந்த சம்பத் பின்னர் வைகோ மதிமுகவைத் தொடங்கியதும் அங்கு போனார். வைகோவுக்கு அடுத்து பிரபலமான பேச்சாளராக மதிமுகவில் வலம் வந்த சம்பத் பின்னர் அதிரடியாக அதிமுகவுக்குத் தாவினார்.
அதிமுகவில் இணைந்த அவருக்கு கொள்கை பரப்புத் துணைச் செயலாளர் பதவியை வழங்கினார் ஜெயலலிதா. மேலும் இன்னோவா காரும் பரிசாக அளிக்கப்பட்டது. இந்த இன்னோவா காரை வைத்து சமூக வலைதளங்களில் பலரும் பலவிதமாக கேலி செய்தனர், கிண்டலடித்தனர். ஆனாலும் சம்பத் அதைப் பற்றிக் கவலைப்படாமல் தொடர்ந்து ஜெயலலிதா புகழ் பாடி வருகிறார்.
இந்த நிலையில் அதிமுகவினரே தற்போது சம்பத்துக்கு ஷாக் கொடுத்துள்ளனர் நாகர்கோவிலில் வைத்து.
நாகர்கோவிலில் அதிமுகவின் நான்காண்டு சாதனைப் பொதுக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக நாஞ்சில் சம்பத் கலந்துகொண்டார். சம்பத் வருகையையொட்டி நாகர்கோவில் முழுவதும் தட்டிகள், போஸ்டர்கள் வைக்கப்பட்டிருந்தன.
அந்த பேனர்களில் நாஞ்சில் சம்பத்தை கட்சியன் கொள்ளை பரப்பு துணை செயலாளர் என்ற ஸ்பெல்லிங் மிஸ்டேக்கோடு குறிப்பிட்டிருந்தனர். இதைப் பார்த்து அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர். அதை விட பேரதிர்ச்சி அடைந்தார் சம்பத்.
யார் செய்த வேலை இது, கஷ்டப்பட்டு கட்சியில் நான் வாங்கிய பொறுப்பு இது. இதை இப்படியா கொச்சப்படுத்துவது என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் புலம்பித் தீர்த்து விட்டாராம் சம்பத்.