திருச்சியில் சசிகலாவுக்கு ஆதரவாக உண்ணாவிரதம்! தேனி, கரூரில் போஸ்டர்கள் கிழிப்பு!!
அதிமுகவில் சசிகலா ஆதரவு, எதிர்ப்பு அணிகள் உருவாகி உள்ளன. திருச்சியில் சசிகலாவுக்கு ஆதரவாக உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
சென்னை: அதிமுக பொதுச்செயலராக சசிகலா உடனே பதவியேற்க வலியுறுத்தி திருச்சியில் 50 அதிமுகவினர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். அதே நேரத்தில் திருவண்ணாமலை, கரூர், தேனி உள்ளிட்ட இடங்களில் சசிகலா போஸ்டர்களை அதிமுகவினர் கிழித்தும் உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுகவில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. சசிகலாவை தலைமை ஏற்க நிர்வாகிகள் வலியுறுத்தினாலும் அதிமுக தொண்டர்கள் எதிர்க்கின்றனர்.
சென்னை உட்பட பல இடங்களில் சசிகலாவுக்கு ஆதரவான போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதே நேரத்தில் இந்த போஸ்டர்களில் சசிகலா முகத்தை மட்டும் அதிமுகவினர் கிழித்து எறிந்தும் வருகின்றனர்.
இந்த நிலையில் திருச்சியில் எம்ஜிஆர் சிலையின் கீழ் சசிகலா உடனே அதிமுக பொதுச்செயலர் பொறுப்பை ஏற்க வலியுறுத்தி 50 அதிமுகவினர் உண்ணாவிரதம் இருந்தனர். அனுமதியின்றி உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய அவர்களை போலீசார் கைது செய்தனர்.
இதனிடையே கரூரில் சசிகலாவை ஆதரித்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஒட்டியிருந்த போஸ்டர்களை அதிமுகவினர் கிழித்து உள்ளனர். இதேபோல் திருவண்ணாமலை, தேனியிலும் சசிகலா போஸ்டர்கள் கிழிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.