'மறுபிறவி’ எடுத்த அம்மாவுக்கு ஒண்ணும் ஆகாது’... அப்பல்லோ வாசலில் கண்ணீர்+நம்பிக்கையுடன் அதிமுகவினர்!
தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு நேற்று மாலை திடீர் மாரடைப்பு ஏற்பட்டு, அவர் சிகிச்சைப் பெற்று வருகிறார். இதனால் அப்பல்லோ மருத்துவமனை வாசலில் ஏராளமான அதிமுக தொண்டர்கள் கவலையுடனும், பிரார்த்தனையுடனும் காண
சென்னை: அப்பல்லோவில் சிகிச்சைப் பெற்று வரும் தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என கண்ணீருடன் கூடிய பிரார்த்தனையுடன் மருத்துவமனை வாசலிலேயே அதிமுக தொண்டர்கள் காத்திருக்கின்றனர்.
கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக முதல்வர் ஜெயலலிதா, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தத் தகவல் கிடைத்ததுமே தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் அதிமுக தொண்டர்கள் அப்பல்லோவுக்கு படையெடுத்தனர்.
இதனால் எப்போதும் அப்பல்லோ வாசலில் அதிமுகவினர் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது. பல்வேறு மதத்தினரும், தங்களது முறையில் ஜெயலலிதாவிற்காக தொடர்ந்து பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
இது தவிர தமிழகத்தின் பல்வேறு வழிபாட்டுத் தலங்களிலும் ஜெயலலிதா பூரண நலம் பெற்று வீடு திரும்ப, பல சிறப்பு வழிபாட்டுகளை அதிமுகவினர் நடத்தி வருகின்றனர்.

திடீர் மாரடைப்பு...
இந்நிலையில், தொடர்ந்து உடல்நலம் தேறி வந்த ஜெயலலிதாவிற்கு நேற்று மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து மீண்டும் அவர் சாதாரண வார்டியில் இருந்து தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்டார். தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால், அப்பல்லோ மருத்துவமனை வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கண்ணீருடன் பிரார்த்தனை...
மருத்துவமனை முன்பு ஆயிரத்திற்கும் அதிகமான அதிமுகவினர் குவிந்துள்ளனர். கண்ணீருடன் தங்களது தலைவி பூரண நலம் பெற்று வர வேண்டும் என அவர்கள் வாய்விட்டு பிரார்த்திப்பதைக் கேட்க முடிகிறது.

கொட்டும் பனியிலும்...
இரவு முழுவதும் கொட்டும் பனியிலும், நிமிடத்திற்கு நிமிடம் அப்பல்லோ நோக்கி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அதிமுகவினர் வந்த வண்ணம் இருந்தனர். இதனால் கூடுதல் பாதுகாப்பிற்காக அங்கு போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டனர்.

நம்பிக்கை...
ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து தெளிவாக தெரியாத போதும், எப்படியும் அவர் தேறி வந்து விட வேண்டும் என்ற நம்பிக்கை அங்கிருந்தவர்கள் கண்களில் தெரிகிறது.

மறுபிறவி..
இது குறித்து அங்கிருந்த அதிமுக பெண் தொண்டர் ஒருவர் பேசுகையில், "எங்கள் அம்மா ஏற்கனவே மறுபிறவி எடுத்து விட்டார். அதனால், அவருக்கு ஒன்றும் ஆகாது. அவர் நூறு ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ்ந்து தமிழகத்தை ஆளுவார்" என்றார்.

தர்மம் தலைகாக்கும்...
இதேபோல், மற்றொரு தொண்டர் பேசுகையில், "தர்மம் தலைகாக்கும். எங்கள் அம்மா செய்த தர்மங்கள் அவரது உயிரைக் காப்பாற்றும்" என கண்ணீருடன் கூறினார்.

அப்பாவி தொண்டர்கள்...
இவர்களில் இருந்து வேறுபட்டு, ஜெயலலிதாவின் உடல்நிலை என்னவென்றே தெரியாதபோதும், அப்பாவியாக, "அம்மாவுக்கு திரும்ப காய்ச்சல்னு சொல்றாங்க. சரி ஆகிடுங்க" என அப்பாவியாக பேசும் தொண்டர்களையும் அங்கு பார்க்க முடிகிறது.

கலவையான உணர்வுகள்...
இப்படியாக கண்ணீருடன் கூடிய பிரார்த்தனை, நம்பிக்கை, கவலை என கலவையான உணர்ச்சிகளுடன் அப்பல்லோ வாசலில் அதிமுகவினர் காத்துக் கிடக்கின்றனர் நல்ல செய்திக்காக.












Click it and Unblock the Notifications