விக்கி விக்கி அழுதபடி ஆதரவு திரட்டிய ஏற்காடு அதிமுக வேட்பாளர் சரோஜா...!
வாழப்பாடியில் ஏற்காடு இடைத் தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. அதில் வேட்பாளர் சரோஜா பெரும் சோகத்துடன் வந்திருந்து பேசினார். அவர் பேசும்போது தொடர்ந்து அழுதபடியே பேசினார். அவரால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை.
சரோஜா பேசுகையில், முதல்வர் ஜெயலலிதாவின் ஆசிபெற்ற வேட்பாளராக ஏற்காடு தொகுதியில் போட்டியிடும் என்னை வெற்றி பெற செய்திட அனைவரும் சிறப்பாக உழைத்திட வேண்டும். நான் பெறும் வெற்றியை முதல்வரின் பொற்பாதங்களில் சமர்பிப்பேன்.
எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க பணிவோடு வேண்டுகிறேன். நான் இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் எனது கணவர் விட்டுச்சென்ற பணிகளை தொடர்ந்து நடத்துவேன் என்றார்.
இப்போதுதான் முதல் முறையாக மேடையேறிப் பேசுகிறாராம் சரோஜா. இதனாலும், தனது கணவரின் நினைவாலும் அவர் தொடர்ந்து கேவிக் கேவி அழுதபடி பேசினார். அவரால் தொடர்ச்சியாக பேச முடியவில்லை. அருகில் இருந்தவர்கள் அவரை ஆறுதல்படுத்தி தொடர்ந்து பேச வைத்தனர்.