மட்டன் பிரியாணி... சிக்கன் 65, முட்டை எல்லாம் சரி... ஓபிஎஸ் எங்க காணோம்
ஓபிஎஸ் இல்லாமல் மதுரையில் நடைபெற்ற அதிமுகவின் முப்பெரும் விழாவில் தொண்டர்களுக்கு மட்டன் பிரியணி, சிக்கன் 65 பரிமாறப்பட்டுள்ளது
Recommended Video
மதுரை: அதிமுகவின் கொடியேற்ற நிகழ்ச்சி முப்பெரும் விழா கட்சியின் ஒருங்கிணைப்பாளர் இல்லாமல் நடந்தேறியுள்ளது.
விழாவில் ஏராளமான தொண்டர்கள் பங்கேற்றனர். கார்த்திகை மாதம் என்பதால் சைவம் சாப்பிடுபவர்களுக்கு காளான் பிரியாணி, தயிர் பச்சடி, சிப்ஸ் வழங்கப்பட்டது.
அசைவம் சாப்பிடும் அதிமுக தொண்டர்களுக்கு மட்டன் பிரியாணி, சிக்கன் 65, முட்டை உட்பட படு ஜோராக உணவு பரிமாறப்பட்டுள்ளது.
அப்பவே தெரியுமா?
அதிமுக முப்பெரும் விழாவை கப்பலூரில் கொண்டாட வேண்டும் என்று 15 தினங்களுக்கு முன்பே திட்டமிட்டுள்ளனர். இதற்காக 100 அடி உயர கம்பம், கல்வெட்டு தயாரிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டில் ஓபிஎஸ் பெயர் இடம்பெறவில்லை.
இரட்டை இலை வெற்றிக்கு
இரட்டை இலையை வென்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு வெற்றிலை மாலை போட்டு வரவேற்பு அளிக்கப்பட்டது. மகிழ்ச்சியோடு அந்த வரவேற்பினை ஏற்றுக்கொண்டார் முதல்வர் எடப்பாடியார்.
கூடிய தொண்டர்கள்
முதல்வர் வருகிறார் என்றாலே தென்மாவட்ட அமைச்சர்கள் படு சிரத்தையாக தொண்டர்களை கூட்டி விடுகின்றனர். போக வர வேன்,தலைக்கு 100 ரூபாய் தப்பாமல் தருகிறார்கள். ஆண்கள் என்றால் குவாட்டர் நிச்சயம்.
கொடிக்கு முன்பே பிரியாணி
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வந்து கொடி ஏற்றிக்கொண்டிருக்கும் போதே ஒரு பக்கம் பிரியாணி கொடுக்கும் படலம் தொடங்கியது. வந்தாச்சு... முதல்வரை பார்த்தாச்சு... ஆளுக்கு காசு கொடுத்து பிரியாணி கொடுத்து விடுங்கப்பா என்று நாட்டாமை மாதிரி இருந்தவர் கூட மக்கள் கூட்டம் நகர ஆரம்பித்து விட்டது.
சைவம், அசைவம் விருந்து
கார்த்திகை மாதமாகையால் ஐயப்ப சாமிக்கு மாலை போட்டவர்களுக்கு காளான் பிரியாணி, தயிர் பச்சடி கொடுக்கப்பட்டது. மாலை போடாத ஆசாமிகளுக்கு மட்டன் பிரியாணி, சிக்கன் 65, அவித்த முட்டை பரிமாறப்பட்டது. எல்லாம் நல்லாயிருக்கு ஓபிஎஸ் எங்கப்பா கணோமே சாப்பிட்டுக்கொண்டே சில தொண்டர்கள் பேசிக்கொண்டனர்.
கீழே மேலே சிந்தி சிதறி
வெளியூர்களில் இருந்து வந்தவர்கள் வேனுக்கு நேரமாகிவிடும் என்று அடித்து பிடித்து பிரியாணியை வாங்கிச்சென்றனர். சிந்தாமல் சிதறாமல் வாங்கிட்டு போங்க எல்லோருக்கும் சாப்பாடு இருக்கு என்று சொன்னதை காதில் வாங்கிக் கொண்டதாக தெரியவில்லை. மேலே கீழே சிந்தி சிதறிக்கொண்டே சாப்பிட்டு விட்டு கலைந்து சென்றனர்.
ஓபிஎஸ் வரலையே
அதெல்லாம் சரிதான்... இரட்டை இலை தீர்ப்பு வந்த 2 நாளிலேயே இத்தனை ஏற்பாடு செய்ய முடிந்தவர்களுக்கு கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்ஐ கூப்பிடனும்னு தோணலை பார்த்தியா என்று அப்பாவியாய் கேட்டார் ஒரு அதிமுக தொண்டர்.