துரோகத்தின் உண்மை முகம் அதிமுகதான்.. காவிரி பிரச்சனை பற்றி ஸ்டாலின் அறிக்கை
துரோகத்தின் உண்மை முகம் அதிமுகதான் என்று காவிரி பிரச்சனை பற்றி ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.
Recommended Video
சென்னை: துரோகத்தின் உண்மை முகம் அதிமுகதான் என்று காவிரி பிரச்சனை பற்றி ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.
காவிரி வாரிய பிரச்சனைக்காக இன்று அதிமுக கட்சியினர் உண்ணாவிரத போராட்டம் செய்தனர். இந்த நிலையில் மாலையில் அவர்கள் போராட்டத்தை கைவிட்டார்கள். இதுகுறித்து திமுக செயல்தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவர் தனது அறிக்கையில் ''மத்திய அரசின் துரோகத்தைக் கண்டித்து உண்ணாவிரதம் இருக்கும் அதிமுகவினர், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் துரோகம் செய்துள்ள பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசைக் கண்டித்துப் பேசத் துணிவில்லாமல், திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளைக் குறிவைத்து விமர்சித்து திசைதிருப்பும் கீழ்த்தரமான அரசியல் செய்திருக்கிறார்கள்.'' என்றுள்ளார்.
மேலும் ''ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்துள்ள அதிமுக, நாடாளுமன்றத்தில் தங்களுக்கு இருக்கிற பெரும்பான்மையைத் தமிழ்நாட்டின் நலனுக்குப் பயன்படுத்தாமல் பாஜகவின் துரோகத்துக்குத் துணை நின்றுவருகிறது. மக்களவையை முடக்கி,நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதம் நடைபெறாமல் பார்த்துக்கொள்ளும் பாஜகவின் தந்திரமான ஏவலாட்களாக செயல்பட்டு மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு நிற்கிறது அதிமுக.'' என்றுள்ளார்.
மேலும் ''தங்கள் துரோகத்தையும் இயலாமையையும் மறைப்பதற்காக உண்ணாவிரத நாடகத்தை அரங்கேற்றி இருக்கிறார்கள். பாஜகவின் துரோகத்தைக் கண்டித்து மென்மையாகக் கூட எதையும் பேசும் திராணியில்லாத அதிமுகவினர்,கன்னியாகுமரி முதல் சென்னை வரைதிமுகழகத்தை விமர்சித்து தங்கள் உண்மை முகத்தை காண்பித்துள்ளனர்.'' என்றுள்ளார்.
மேலும் ''நாங்களும் போராடினோம் என்று மக்களை ஏமாற்ற அதிமுக போட்ட நாடகம், அவர்களது எஜமானர்களைக் கண்டிக்க முடியாத அவதி ஆகியவற்றால், மக்கள் மன்றத்தில் அவர்களுடைய முகத்திரை கிழிந்து அவமானத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள்.'' என்றுள்ளார்.