ராஜிவ் கொலை வழக்கில் தீர்ப்பை விமர்சிப்பதா? 'நா.சா" மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு- அதிமுக கோரிக்கை!
புதுச்சேரி: ராஜிவ்காந்தி கொலை வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை விமர்சித்த மத்திய அமைச்சர் நாராயணசாமி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரவேண்டும் என புதுவை மாநில அதிமுக செயலாளர் ஆ.அன்பழகன் எம்எல்ஏ வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று புதுவையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரின் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் அவர்களை விடுதலை செய்வது மாநில அரசின் பொறுப்பு எனவும் கூறியிருந்தது.

இதையடுத்து முதல்வர் ஜெயலலிதா, அமைச்சரவையில் எடுத்த முடிவின்படி 7 பேர் விடுதலை செய்யப்படுவர் என சட்டசபையில் அறிவித்தார்.
இந்நிலையில், வழக்கை சரியாக ஆராயாமல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தீர்ப்பு முன்னுக்குப் பின் முரணாக உள்ளது என மத்திய அமைச்சர் நாராயணசாமி விமர்சித்துள்ளார்.
எனவே அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர வேண்டும் என ஜனாதிபதிக்கும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கும் கோரிக்கை மனு அனுப்பப்படும். மேலும் ராஜிவ் கொலை வழக்குப் பிரச்னையில் அதிமுக இரட்டை வேடம் போடுவதாக நாராயணசாமி கூறியுள்ளார். உண்மையில் காங்கிரஸ்தான் இரட்டை வேடம் போடுகிறது.
இவ்வாறு அன்பழகன் கூறினார்.












Click it and Unblock the Notifications