டிச. 29-ம் தேதி கூடுகிறது அதிமுக பொதுக்குழு.. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு
அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் வரும் 29-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: சென்னையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் டிசம்பர் 29-ந் தேதி அதிமுக பொதுக்குழு கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமாக பதவி வகித்து வந்த ஜெயலலிதா கடந்த 5-ஆம் தேதி காலமானார். இதனையடுத்து தமிழக முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்றுக் கொண்டார். எனினும் அதிமுக பொதுச் செயலாளராக யார் பொறுப்பேற்பார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.
ஆனால், அதிமுக மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள் என பெரும்பாலானோர் மறைந்த ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவை அதிமுக பொதுச் செயலாளராக பதவியேற்க வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும் ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டை கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று மாலை நடைபெற்றது. இக்கூட்டம் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமை தாங்கினார். இதில் அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமி, தங்கமணி, வேலுமணி உள்ளிட்ட 50 மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் வரும் டிசம்பர் 29-ம் தேதி நடைபெறும் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பொதுக்குழு உறுப்பினர்கள் 2770 பேருக்கும், செயற்குழு உறுப்பினர்கள் 280 பேருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த அழைப்பு கடிதங்கள் அனைத்தும் மாவட்டச் செயலாளர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.