ஜெ.வை பாராட்ட திமுக எம்.எல்.ஏ எதிர்ப்பு... கருணாநிதியை புகழ அதிமுக எதிர்ப்பு: சட்டசபையில் அமளி
சென்னை: சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதாவை பாராட்டிப் பேச எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் கோஷமிட்டதால் சட்டசபையில் பரபரப்பு ஏற்பட்டது. அதேபோல திமுக உறுப்பினர்கள் திமுக தலைவர் கருணாநிதியை பாராட்டி பேசுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள் கூச்சலிட்டதால் சட்டசபை அமளி துமளியானது.
சட்டசபையில் நேற்று நேரமில்லா நேரத்தில் எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தன்னை பேச அனுமதிக்கும்படி சபாநாயகரிடம் கேட்டார். இதற்கு சபாநாயகர் அனுமதி வழங்கினார்.
மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை, மேட்டூர் கண் மருத்துவமனையில் 16 பேருக்கு கண்பார்வை இழப்பு, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட 34 தீர்மானங்களை வழங்கியிருக்கிறோம். செப்டம்பர் 2-ந்தேதியோடு சட்டசபை கூட்டம் முடிவதால் ஒரு நாளைக்கு 2 ஒத்திவைப்பு தீர்மானத்தை எடுத்தால் தான் முழுவதையும் விவாதிக்க முடியும் என்று ஸ்டாலின் கூறினார்.
சம்பந்தப்பட்ட துறைகளில் இருந்து பதில் வந்ததும் தீர்மானங்களை எடுத்துக்கொள்கிறேன் என்று சபாநாயகர் தெரிவித்தார்.

விவசாயக்கடன் தள்ளுபடி
திமுக எம்.எல்.ஏ சக்கரபாணி பேசும் போது கூட்டுறவு வங்கிகளில் சிறு, குறு விவசாயிகள் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்வது போல அனைத்து விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார். இதேபோல் ஒவ்வொரு உறுப்பினர்களும் பேசினர்.

செல்லூர் ராஜூ பாராட்டு
இதைத்தொடர்ந்து அமைச்சர் செல்லூர் ராஜூ எழுந்து உறுப்பினர்களின் கேள்விக்கு பதில் அளித்து பேசினார். அப்போது அவர் முதல்வர் ஜெயலலிதாவை பாராட்டி, ‘6வது முறையாக மகுடம் சூடி அகிலமே போற்றி பாராட்டும் அதிசயம் நம் அம்மா' என்று பேச தொடங்கினார்.

திமுகவினர்அமளி
தி.மு.க. உறுப்பினர்கள் அப்போது கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஒட்டு மொத்தமாக அவர்கள் எழுந்து நின்று கோஷம் எழுப்பினர். அமளியிலும் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து சபாநாயகர் தி.மு.க. உறுப்பினர்களை பார்த்து, ‘நீங்கள் இதுபோன்று தேவையில்லாமல் அமைச்சர் பேசும்போது குறுக்கிட கூடாது. இது அவை மரபும் அல்ல' என்றார்.

தடுப்பது ஏன்?
இந்த கூட்டத்தில் முதல் முதலாக பேசுகிறேன். என்னை இந்த இடத்தில் உட்கார வைத்து அழகு பார்த்த என் தாயை பற்றி பேசாமல் வேறு யாரை பற்றி பேசுவேன். அதை நீங்கள் எப்படி தடுக்கலாம் என்று செல்லூர் ராஜூ கேட்டார்.

நாங்கள் கேட்கிறோம்
திங்கட்கிழமை இதே அவையில் உங்கள் தி.மு.க. உறுப்பினர்கள் பலரும் தாத்தா, பேரன், கொள்ளு பேரன் பற்றி பேசி விட்டு தான் மற்றவற்றை பேசினீர்கள். அதை நாங்கள் கேட்டுக்கொண்டு தான் இருந்தோம். இப்போது நான் பேசும்போது மட்டும் கோஷம் போடு கிறீர்களே. இது தான் உங்கள் நாகரிகமா? உங்கள் எதிர்க் கட்சி தலைவர் இங்கே அமர்ந்து இருக்கிறார். அவரையும் மீறி பேசுகிறீர்கள் என்று கேட்டார் செல்லூர் ராஜூ.

சபாநாயகர் அனுமதி
அவையில் தொடர்ந்து தி.மு.க. உறுப்பினர்கள் கோஷமிட்டப்படி இருந்தனர். அப்போது சபாநாயகர், முதல்வரை பாராட்டி அமைச்சர் பேசுவது தவறு இல்லை. நீங்கள் உங்கள் தலைவரை பாராட்டி விட்டு தானே பேசுகிறீர்கள். இத்துடன் இதை முடித்துக்கொள்ளுங்கள். பட்ஜெட் மீதான விவாதத்தில் உறுப்பினர் கே.என்.நேரு பேசலாம் என்றார்.

கே.என். நேரு புகழ்ச்சி
சட்டசபையில் உரையை தொடங்கிய கே.என். நேரு, தமிழ் கூறும் நல்லுலகின் என் அன்பு தலைவர்..... என்று ஆரம்பித்தார். உடனே அ.தி.மு.க. உறுப்பினர்கள் எழுந்து நின்று கோஷம் எழுப்பினர். பதிலுக்கு தி.மு.க. உறுப்பினர்களும் எழுந்து நின்று கோஷம் எழுப்பினர்.

எங்களுக்கு எரியும்
தொடர்ந்து கே.என்.நேரு பேசும் போது, ‘எங்களை உருவாக்கிய தலைவரைப் பற்றி பேசும் போது உங்களுக்கு எப்படி எரிகிறதோ, அப்படித்தான் நீங்கள் பேசும் போது எங்களுக்கும் எரிகிறது' என்று அதிமுகவினரைப் பார்த்து கூறினார்.

அமளி துமளியான அவை
அ.தி.மு.க.- தி.மு.க. உறுப்பினர்கள் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே சபாநாயகர் இரு தரப்பினரையும் அமைதிப்படுத்தினார். சிறிது நேர அமளி துமளிக்குப் பின்னர் சட்டசபையில் விவாதம் தொடர்ந்து நடந்தது. சட்டசபையில் மக்கள் பிரச்சினையை பேசுவதை விட அவரவர்களின் தலைவர்களை புகழ்வதையும், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவுமே அதிக நேரம் செலவாகிறது என்கின்றனர் டிவியில் விவாதத்தை பார்க்கும் பொதுமக்கள்.












Click it and Unblock the Notifications