பிரதமர் மோடியோடு தனித்தனியே சந்திப்பா? எடப்பாடி, ஓ பன்னீர் செல்வம் வியூகம்! இன்று என்ன நடக்கும்?
சென்னை: சென்னைக்கு இன்று பிரதமர் நரேந்தி மோடி வருகை தர உள்ளார். இந்நிலையில் தான் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க வியூகம் வகுத்து எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் தனித்தனியே சந்திக்க திட்டமிட்டு நேரம் கேட்டுள்ளனர். அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி உள்ள நிலையில் ஓ பன்னீர் செல்வம் தனி அணியாக செயல்பட்டு வரும் நிலையில் இந்த நடவடிக்கை முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் செயல்பட்டனர். கடந்த ஆண்டு ஜூலை 11 பொதுக்குழுவில் ஓ பன்னீர் செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்த பொதுக்குழுவில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். இதை எதிர்த்து ஓ பன்னீர் செல்வம் நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தார். இருப்பினும் அவருக்கு தோல்வியே கிடைத்தது.
இதற்கிடையே அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி களமிறங்கி போட்டியின்றி கடந்த மாதம் தேர்வு செய்யப்பட்டார். 2022 ஜூலை 11 அதிமுக பொதுக்குழு தீர்மானம், கட்சியின் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓ பன்னீர் செல்வம் தரப்பினரின் வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் இருநீதிபதிகள் அமர்வில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் தான் இன்று பிரதமர் மோடி சென்னை விமான நிலையத்தின் புதிய முனையம், சென்னை-கோவை வந்தே பாரத் ரயில் சேவை உள்பட பல்வேறு ரயில் சேவை மற்றும் திட்ட பணிகளை தொடங்கி வைக்கிறார். சென்னை வரும் பிரதமர் மோடி பாஜக தலைவர்கள் சந்தித்து பேச உள்ளனர்.
இது ஒருபுறம் இருக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச நேரம் கேட்டுள்ளனர். நேரம் ஒதுக்கீடு செய்யும் பட்சத்தில் அதிமுக பொதுச்செயலாளரான பிறகு பிறகு முதல் முறையாக பிரதமர் மோடியை சந்திப்பார். தற்போது தமிழ்நாட்டில் அதிமுக-பாஜக கூட்டணி இடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று எடப்பாடி பழனிச்சாமியை பிரதமர் மோடி சந்தித்தால் அது தற்போதைய அதிமுக-பாஜக கூட்டணிக்கு வலுவாக பார்க்கப்படும்.
அதேபோல் அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ள ஓ பன்னீர் செல்வம் தனி அணியாக செயல்பட்டு வருகிறார். பாஜக மீது விசுவாசத்துடன் செயல்பட்டு வந்த ஓ பன்னீர் செல்வமும் அரசியலில் அடுத்தக்கட்ட நகர்வு குறித்து முடிவு எடுப்பதில் காலம் தாமதித்து வருகிறார். நீதிமன்ற தீர்ப்புக்கு தனக்கு சாதகமாக இல்லாததால் அவர் தனி அணியாக செயல்பட்டு வருகிறார். இதற்கிடையே தான் ஓ பன்னீர் செல்வமும் இன்று பிரதமர் மோடியை சந்திக்க திட்டமிட்டுள்ளார். இது நடந்தால் நடக்கும் பிரச்சனை பற்றி ஓ பன்னீர் செல்வம் பேசலாம். அதோடு இன்னும் பிரதமர் மோடி, ஓ பன்னீர் செல்வத்தை ஆதரிப்பதாக கருதப்படும். அதோடு அது ஓ பன்னீர் செல்வத்தும், அவரது அணிக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும்.

ஏனென்றால் பாஜகவை பொறுத்தமட்டில் அதிமுக ஒரே அணியாக எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் சேர்ந்து செயல்பட வேண்டும் என விரும்புகிறது. அப்போது தான் அடுத்த ஆண்டு நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு எதிராக பலமாக போராட முடியும் என பாஜக நினைக்கிறது. ஆனால் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஓ பன்னீர் செல்வத்தை மீண்டும் அதிமுகவில் சேர்க்க விரும்பவில்லை. இந்நிலையில் தான் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் நேரம் கேட்டுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே தான் பிரதமர் நரேந்திர மோடியை முன்னாள் முதல்வர்களான எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் இன்று சென்னை விமான நிலையத்தில் வரவேற்க உள்ளனர். இதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் இருவரிடமும் தனித்தனியாகவா அல்லது இருவரையும் ஒன்றாக அமர வைத்து பிரதமர் மோடி பேசுகிறாரா? என்பது பற்றிய விபரங்கள் இன்னும் மர்மமாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications