சுமூக பேச்சுவார்த்தை நடக்கும்...இயற்கையான தாமதம்- என்னதான் சொல்றார் பொன்னையன்
சென்னை: அதிமுக இரு அணிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெறும் என்று ஓபிஎஸ் அணியின் பொன்னையன் கூறியுள்ளார். ஆனால் எப்போது நடக்கும் என்று கூறவில்லை. அதே போல எங்கள் கோரிக்கைகளை ஈபிஎஸ் அணி நிச்சயமாக ஏற்க வேண்டும் என மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை வீனஸ் காலனி இல்லத்தில் ஆலோசனைக்கு பின் பாண்டியராஜன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை நடத்துவது குறித்து ஆலோசனை நடந்தது என பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் ஓபிஎஸ் - ஈபிஎஸ் அணிகளுக்கு இடையேயான அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை எப்போது நடைபெறும் என்ற கேள்வி எழுந்துள்ளது. அது நடக்குமா? நடக்காதா? என்ற சந்தேகமும் எழாமல் இல்லை காரணம், இரு அணியினரும் மாறி மாறி பேசும் பேச்சுக்கள்தான்.
எங்களின் இரு கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டால் மட்டுமே அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை என்று ஓபிஎஸ் அணி கூறுகிறது. ஆனால் ஈபிஎஸ் அணியோ முதலில் பேச்சுவார்த்தை என்று ஒற்றை பேச்சில் நிற்கின்றனர்.

ரகசிய பேச்சுவார்த்தை
அதிமுகவின் இரு அணிகளுக்குமிடையே உள்ள தலைவர்கள் ரகசியமாக ஹோட்டல் அறையில் சந்தித்து பேசியுள்ளனர். அதற்கு மறுநாள்தான் சசிகலாவின் பேனர்கள் தலைமை அலுவலகத்தில் இருந்து அகற்றப்பட்டன.

தொடர்பு இருக்கா இல்லைய?
அதே நேரத்தில் அதிமுகவில் சசிகலாவிற்கும், டிடிவி தினகரனுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறினாலும் கட்சி கூட்டங்களில் பிரதானமாக போஸ்டர்களில் சசிகலா இடம் பெற்றிருக்கிறார்.

தொண்டர்கள் மனநிலை
கட்சி, சின்னத்தை மீட்டெடுக்க வேண்டும் என்பது அதிமுக தொண்டர்களின் மனநிலை. அதற்கான இரு அணிகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்று அமைச்சர்கள், நிர்வாகிகள் கூறினாலும் எடப்பாடி அணியுடன் இணைவதற்கு பலரும் விரும்பவில்லை என்றே கூறப்படுகிறது. அதனை அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்தியுள்ளார் ஓபிஎஸ் அணியின் செம்மலை.

கோரிக்கையை ஏற்க வேண்டும்
ஈபிஎஸ் அணியினர் தங்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு பேச்சுவார்த்தை நடத்த முன் வரவேண்டும் என்று ஓபிஎஸ் அணியின் மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார். அதே போல பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெறும் என்று பொன்னையனும் கூறியுள்ளார்.

அது வேறு இது வேறு
ஈபிஎஸ் அணியினர் தாக்கல் செய்துள்ள பிரமாணப்பத்திரத்தில் சசிகலா, டிடிவி தினகரன், எடப்பாடி பழனிச்சாமி பெயர்கள் இடம் பெற்றுள்ளது பற்றி கூறிய பொன்னையன், அது வேறு, இதுவேறு, பேச்சுவார்த்தைக்கும் அதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் பொன்னையன் கூறியுள்ளார்.இரு அணிகளுக்கும் இடையே மறைமுகப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இயற்கையான தாமதம்
பொதுச் செயலாளர் குறித்து நாங்கள் எந்தவிதக் கோரிக்கையும் வைக்கவில்லை. இரு அணிகளும் இணைவதில், இயற்கையாகவே கால தாமதம் உண்டாகிவருகிறது. எல்லாம் நல்லபடியாக நடக்கும். பேச்சுவார்த்தை சுமுகமாக நடக்கும். அதற்கான இணக்கமான சூழல் வரும் என்றும் கூறியுள்ளார்.

நடக்குமா? நடக்காதா?
அமாவாசையில் பேச்சுவார்த்தை நடக்கும் என்றார்கள் அட்சய திருதியையில் இணைப்பு என்றார்கள். இரண்டு நாட்களுமே முடிந்து விட்டது. எப்போது பேசி எப்போது இணைப்பார்கள் நடக்குமா? நடக்காதா என்பதே இப்போது அதிமுக தொண்டர்களின் முன் உள்ள கேள்வியாகும்.












Click it and Unblock the Notifications