பாஜக வேட்பாளர் மீது தாக்குதல், போராட்டத்தில் குதித்த தமிழிசை: 4 அதிமுகவினர் மீது வழக்கு
சென்னை: சென்னையில் பாஜக வேட்பாளரை தாக்கியது தொடர்பாக அதிமுகவினர் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை அண்ணா நகர் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் க. சுரேஷ் சூளைமேட்டில் உள்ள அன்னை சத்யா நகரில் வெள்ளிக்கிழமை இரவு பூத் சிலிப் வழங்கியுள்ளார். அவருடன் அவரது ஆதரவாளர்களும் சேர்ந்து பூத் சிலிப் வழங்கியுள்ளனர்.

அப்போது அங்கு வந்த அதிமுகவினருக்கும், பாஜகவினருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அதிமுகவினர் சுரேஷ் மற்றும் அவரது ஆதரவாளர்களை தாக்க பதிலுக்கு அவர்களும் தாக்கினார்களாம்.
இந்த தாக்குதலில் காயம் அடைந்த சுரேஷ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுகவினரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் கிடைத்து அங்கு வந்த பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் சாலை மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டார்.
இது பற்றி தகவல் கிடைத்தவுடன் போலீசார் அங்கு வந்து பாஜகவினரை சமாதானம் செய்தனர். சம்பந்தப்பட்ட அதிமுகவினர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் வாக்குறுதியளித்த பிறகே பாஜகவினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்நிலையில் பாஜகவினர் அளித்த புகாரின்பேரில் அதிமுக நிர்வாகிகள் எம்.ஜி.ஆர்.(40), ஏழுமலை(30), சீனிவாசன்(20) மற்றும் சுரேஷ்(28) ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications