"தியாக செம்மல்" - திஹார் தினகரனுக்கு அதிமுகவினர் தந்த பட்டம்.. கன்னியாகுமரியில் பரபரப்பு
திஹார் சிறை சென்று திரும்பியுள்ள டிடிவி தினகரனுக்கு தியாகச் செம்மல் என்ற பட்டத்தை சூட்டியிருக்கிறார்கள் அதிமுகவினர்.
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் டி.டி.வி., தினகரனுக்கு தியாக செம்மல் பட்டம் குறித்து அதிமுகவினர் போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
ஜெயலலிதா மறைவை அடுத்து அதிமுகவில் சின்னம்மா, அம்மாவின் ஆளுமையே என்றெல்லாம் சசிகலாவை அதிமுகவினர் அழைத்து வந்தனர். இதேபோல் மறைந்த ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவிற்கு 'சின்னத்தாய்' பட்டம் சூட்டி அழகுபார்த்தனர் அதிமுகவினர். அந்தவகையில் டிடிவி தினகரனுக்கு தியாகச் செம்மல் பட்டம் கொடுத்துள்ளனர் கன்னியாகுமரி அதிமுகவினர்.
தினகரனு்க்கு தியாக செம்மல் பட்டம் வழங்கி ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், இரட்டை இலை சின்னத்திற்காக சிறை சென்று திரும்பியுள்ள அதிமுக கழக துணை பொது செயலாளர் டி.டி.வி., தினகரன் அவர்களே, கழக பணியும் மக்கள் பணியும் செய்ய வாருங்கள் என்ற வாசகத்துடன் கூடிய போஸ்டர் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், வடசேரி, கோட்டார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக ஒட்டப்பட்டுள்ளது.
குமரி மாவட்ட அண்ணா தொழிற்சங்க தலைவர் காரவிளை செல்வன், டி.டி.வி., தினகரன் பேரவை மாவட்ட அமைப்பாளர் சங்கர், வக்கீல் அணி இணை செயலாளர் முருகேஸ்வரன் ஆகியோர் பெயரில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டரில் அண்ணாதுரை, எம்,ஜி.ஆர்., ஜெயலலிதா, சசிகலா, தினகரன், இபிஎஸ், தளவாய் சுந்தரம், தமிழ் மகன் உசேன், நாஞ்சில் சம்பத், மாஜி அமைச்சர் பச்சைமால் ஆகியோரின் படங்கள் இடம்பெற்றுருந்தன.
இருப்பினும் மாவட்ட செயலாளர் மற்றும் மேல்சபை உறுப்பினருமான விஜயகுமார் படம் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து மாவட்ட செயலாளர் மீது புகார் கூறியவர்கள் டி.டி.வி., தினகரனை வாழ்த்தி போஸ்டர் ஒட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. டி.டி.வி., தினகரனுக்கு தியாக செம்மல் பட்டம் குறித்து அதிமுக வினர் ஒட்டியுள்ள போஸ்டர் குமரி மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொன்மன செம்மலுக்கு போட்டியாக தியாக செம்மல் பட்டம் போஸ்டர் அதிமுக வினர் மத்தியில் அதிருப்தியை உருவாக்கி உள்ளது.