சென்னை அதிமுக பிரமுகர் புல்லட் விஸ்வநாதன் கொலைவழக்கு: "பெண் தாதா" சசிகலா கைது
சென்னை: சென்னையில் அதிமுக நிர்வாகி புல்லட் விஸ்வநாதன் கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த பெண் தாதா சசிகலாவை போலீஸார் இன்று கைது செய்தனர்.
நெசப்பாக்கம் சூளைப்பள்ளம் பல்லவன் தெருவைச் சேர்ந்தவர் ஏ.எம். விஸ்வநாதன் என்ற புல்லட் விஸ்வநாதன். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த விஸ்வநாதன், அதிமுக கட்சியின் 128வது வட்ட ஜெயலலிதா பேரவைச் செயலராகவும் இருந்தார்

கடந்த மாதம் 18ஆம் தேதி விஸ்வநாதன் மோட்டார் சைக்கிளில் நெசப்பாக்கத்தில் வரும்போது மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது குறித்து கே.கே.நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனர்.
விசாரணையில் சொத்துப் பிரச்னையின் காரணமாக அ.தி.மு.க. பிரமுகர் விஸ்வநாதன் திட்டமிட்டு கூலிப்படையால் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. கோர்ட்டில் சரண் அடைந்த 4 பேரும் அவரை கொன்ற கூலிப்படையினர் என்பது தெரிந்தது.
கொலையுண்ட விஸ்வநாதனின் சகோதரி குமுதாவுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த வரதன் என்பவருக்கும் திருமணம் நடந்தது. தற்போது இருவரும் பிரிந்து விட்டனர். சசிகலா என்ற பெண்ணை வரதன் 2வது திருமணம் செய்துள்ளார். எனவே வரதனுக்கு கே.கே.நகரில் உள்ள ரூ.1 கோடி மதிப்புள்ள சொத்தை தனது சகோதரி பெயருக்கு எழுதி வைக்கும்படி விஸ்வநாதன் வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், வரதன் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றார். தற்போது குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் உள்ளார். அவரை 2வது மனைவி சசிகலா சந்தித்தார். அப்போது வரதனின் நண்பர்களை கூலிப்படையாக அனுப்பி விஸ்வநாதனை கொலை செய்ய திட்டம் திட்டி உள்ளனர். அதன்படி விக்கி, முருகன், தேவா, ராஜா ஆகியோர் மோட்டார் சைக்கிளில் சென்று விஸ்வநாதனை கொலை செய்துள்ளனர். இதற்கு வரதனின் 2வது மனைவி சசிகலா உடந்தையாக இருந்தார் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து கூலிப்படையினர் திருவண்ணாமலை நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.
ஆனால் சசிகலா தலை மறைவானார். அவரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து போலீஸார் தலைமறைவாக இருந்த சசிகலாவை தேடி வந்தனர். ஆனால் சசிகலா போலீஸாரிடம் சிக்காமலேயே இருந்து வந்தார்.
இந்த நிலையில், இன்று தனிப்படை போலீசார் வரதனின் 2வது மனைவி சசிகலாவை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அவர் அளித்த வாக்கு மூலத்தில் விஸ்வநாதனை கூலிப்படை உதவியுடன் வரதன், சசிகலா ஆகியோர் திட்டமிட்டு கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். விஸ்வநாதன் கொலை வழக்கில் வரதன் முதல் குற்றவாளியாகவும் சசிகலா 2வது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர். தனிப்படை போலீசாரை சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் பாராட்டினார்.












Click it and Unblock the Notifications