ஜெயலலிதாவின் கொடும்பாவியை எரித்தவருக்கு அதிமுகவில் சீட்டு: கொதிக்கும் கட்சி நிர்வாகிகள்
குமரி: முதல்வர் ஜெயலலிதாவின் உருவ பொம்மையை எரித்த நபருக்கு அதிமுகவில் சீட்டு வழங்கப்பட்டுள்ளதாக அக்கட்சி நிர்வாகிகள் அதிர்ச்சி தகவலை வெளிட்டுள்ளார்கள்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் பட்டியல் அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதாவின் பிறந்தநாள் அன்று வெளியிடப்பட்டது. இதில் பல வேட்பாளர்கள் குறித்து போயஸ் கார்டனில் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளதாம்.
இந்த நிலையில் கன்னியாகுமரி அதிமுக வேட்பாளர் ஜான் தங்கம் மீதும் புகார் மழை பொழிய ஆரம்பித்துள்ளதாம்.
ஜான் தங்கம் காங்கிரஸ் கட்சியில் இருந்தவர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தான் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். அப்போது முதல் ஆக்டிவாக செயல்பட்டு வருபவர்களில் அவரும் ஒருவர் என கட்சி முன்னணி நிர்வாகிகளே கூறுகின்றார்கள். இந்த நிலையில் ஜான் தங்கம் பெயரை ஜெயலலிதா அறிவித்த நிமிடத்தில் இருந்து அவர் மீது புகார் புயல் வீசுகின்றதாம்.
ஏற்கனவே, அம்மா உருவ பொம்மையை எரித்த ஜான் தங்கத்திற்கு எம்.பி. சீட்டா என அதிமுக நிர்வாகிகள் சிலர் ஆதாரங்ளை இணைத்து, வரிந்து கட்டிக் கொண்டு கார்டனுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்களாம்.
நான் அம்மா உருவ பொம்மையை எந்த நேரத்திலும் எரித்தது கிடையாது. எனது அரசியல் எதிரிகள் சதி செய்கின்றார்கள் என்று ஜான் தங்கம் நொந்து போய் சொல்கின்றாராம்.