நடு ரோட்டில் அதிமுகவினர் கோஷ்டிப் பூசல்.. சரமாரி அடி.. 5 பேர் காயம்
சங்கரன்கோவில்: தென்காசி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட சங்கரன்கோவிலுக்கு அருகே உள்ள கிராமத்தில் ஓட்டு வேட்டையாக் கிளம்பிய அதிமுகவினரிடையே கோஷ்டி மோதல் வெடித்து இரு தரப்பினரும் சரமாரியாக அடித்துக் கொண்டதில் 5 பேர் காயமடைந்து மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தென்காசி தனி தொகுதியில் அதிமுக சார்பில் வசந்தி முருகேசன் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக இன்று சங்கரன்கோவில் அருகே உள்ள தேவர்குளம் பகுதியில் அதிமுகவினர் பிரசாரம் செய்தனர்.
இதற்காக அதிமுகவினர் வாகனங்களில் குவிந்தனர். அப்போது வேட்பாளர் இருந்த வேனில் ஏற் முன்னாள் எம்.எல்.ஏவும், மேலநீலிதநல்லூர் நகராட்சித் தலைவருமான முருகையா பாண்டியன் முயன்றார்.
அதற்கு எம்.எல்.ஏ முத்துச்செல்வி ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சில மாதங்களுக்கு முன்புதான் முருகையா பாண்டியனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கினராம். மேலும் இவருக்கும் முத்துச்செல்வி தரப்புக்கும் இடையே கடும் மோதலும் இருந்து வருகிறது.
முத்துச்செல்வி தரப்பு கூறியதன் பேரில் முருகையா பாண்டியன் மீ்து சில வழக்குகளும் போடப்பட்டதாகவும் சொல்கிறார்கள். இதன் காரணமாக இரு தரப்பும் எப்போதும் உராய்ந்தபடி இருந்தது.
இந்த நிலையில் இன்று இந்த மோதல் பூதாகரமாக வெடித்தது. இரு தரப்பினரும் சரமாரியாக அடித்துக் கொண்டனர். இந்த சண்டையை ஊரே கூடி வேடிக்கை பார்த்தது. முருகையா பாண்டியன், ஆதரவாளர்களின கார்கள் அடித்து உடைக்கப்பட்டன.
இந்த சண்டையில் முருகையா பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ. சண்முகையா பாண்டியன், ஒன்றிய இளைஞர் அணித் துணைச் செயலாளர் செளந்தர பாண்டியன், சங்கரன்கோவில் அண்ணா தொழிற்சங்கச் செயலாளர் செல்வராஜ், கதிரேசன் ஆகிய 5 பேர் காயமடைந்தனர். அவர்களை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பிரசாரமும் பாதியிலேயே நிறுத்தப்பட்டு விட்டது.