அதிமுகவுக்கு தலைமையேற்க சசிகலாவிடம் மூத்த நிர்வாகிகள் வலியுறுத்துவதாக சொல்கிறது ஜெயா டிவி!
சசிகலாவை அதிமுகவுக்கு தலைமை ஏற்க அக்கட்சி மூத்த நிர்வாகிகள் வலியுறுத்துவதாக ஜெயா டிவி செய்தி ஒளிபரப்பியது. அதிமுகவின் மையப்புள்ளியாக சசிகலா செயல்படவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனராம்.
சென்னை: அதிமுகவுக்கு தலைமை ஏற்க வேண்டும் என்று சசிகலாவிடம் அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் வலியுறுத்துவதாக ஜெயா டிவி செய்தி ஒன்றை ஒளிபரப்பி வருகிறது.
ஜெயலலிதா மறைவினால் அதிமுகவின் அடுத்த தலைமை யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. சசிகலாவை அடுத்த பொதுச்செயலராக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதனிடையே இன்று திடீரென ஜெயா டிவி குழுமத்தின் ஜெயா ப்ளஸ் சேனலில், அதிமுகவுக்கு தலைமை ஏற்க விகே சசிகலாவிடம் மூத்த நிர்வாகிகள் வலியுறுத்தல் என்றும் ஜெயலலிதா வழியில் கட்சியை வழிநடத்த வேண்டுகோள் எனவும் செய்தி வெளியிடப்பட்டது.
அத்துடன் சசிகலாவை சந்திக்கும் வீடியோ காட்சி ஒன்றும் ஜெயா ப்ளஸில் வெளியிடப்பட்டது. அதில் மதுசூதனன், செங்கோட்டையன், சிஆர் சரஸ்வதி, சைதை துரைசாமி, கோகுல இந்திரா, வளர்மதி, விஜிலா சத்தியானந்த் உள்ளிட்டோர் சசிகலாவிடம் கை கூப்பி பேசும் காட்சி இடம் பெற்றுள்ளது.