ஏன்டா நோட்டீஸ்ல என் மனைவி பெயர் கீழே இருந்தது: அதிமுக கூட்டத்தில் ஒன்றிய செயலாளருக்கு அடி, உதை
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் நடந்த அதிமுக பொதுக் கூட்டத்தில் ஒன்றிய செயலாளருக்கு அடி, உதை விழுந்தது.
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை ஒன்றியத்தில் உள்ள லந்தகோட்டையில் அதிமுக பொதுக் கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலளார் மலர்வண்ணன் தலைமையில் நடந்த கூட்டத்தின் முடிவில் கட்சியின் தலைமை நிலைய பேச்சாளர் மூர்த்தி பேசினார்.
அப்போது முன்னாள் செயலாளர் மதுராபாண்டி உள்பட சிலர் திடீர் என்று மேடையில் ஏறி மைக்கை பறித்துக் கொண்டு மலர்வண்ணனிடம் தனது மனைவி காஞ்சனா குஜிலியம்பாறை ஒன்றியத்தின் முன்னாள் தலைவர் மற்றும் தற்போதைய மாவட்ட மகளிர் அணி துணை செயலாளராக இருந்தும் அவரது பெயரை ஏன் நோட்டீஸின் கீழ் பகுதியில் அச்சடித்தீர்கள் என்று கேட்டு தகராறில் ஈடுபட்டார்.
இதையடுத்து மதுராபாண்டி மலர்வண்ணனின் கன்னத்தில் அறைந்து அவரை எட்டி உதைத்தார். இதை பார்த்து மேடையில் இருந்த மற்ற நிர்வாகிகள் அங்கிருந்து ஓடி காரில் தப்பியோடிவிட்டனர்.
இதையடுத்து மதுராபாண்டி உள்ளிட்ட சிலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து மலர்வண்ணன் கூறுகையில்,
காரணம் இல்லாமல் பேச்சாளரை பேச விடாமல் அடிக்க சென்றதால் நாங்கள் தடுத்தோம். ஆனால் எங்களுக்கும் அடி விழுந்தது. அதனால் புகார் கொடுத்தோம் என்றார்.
மதுராபாண்டி கூறுகையில்.
கடந்த 30 ஆண்டுகளாக கட்சிக்காக உழைத்துக் கொண்டிருக்கிறோம். எங்களை வேண்டும் என்றே அவமானப்படுத்தியதற்கான காரணத்தை கேட்டோம். ஆனால் அடித்ததாக தவறான புகார் கொடுத்துள்ளார்கள் என்றார்.












Click it and Unblock the Notifications