ஓபிஎஸ்-எடப்பாடி அணிகள் இணைந்தால் அடுத்து என்ன நடக்கும்?
பிளவுபட்டுப் போய் இருக்கும் அதிமுகவின் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அணிகள் இணையும் வாய்ப்பு மீண்டும் கனிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை: ஓபிஎஸ் அணியும் ஈபிஎஸ் அணியும் இணைந்தால் அடுத்து என்னென்ன நடக்கும் என்ற பரபரப்பு தகவல்கள் வெளியாகி வருகிறது.
ஜெயலலிதா மறைந்த பின்னர், உடைந்த அதிமுக மீண்டும் இணைய முடியாமல் திணறி வருகிறது. ஆளுக்கு ஒரு பேச்சு பேசி இணைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சிறைக்குச் சென்றிருந்த அதிமுக அம்மா அணியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஜாமீனில் வெளியே வந்த பின்னர் இரு அணிகளும் இணைய 60 நாட்கள் கெடு விதித்தார்.

கெடு முடிவு
தினகரன் கொடுத்திருந்த காலக்கெடு வரும் 5ம் தேதியோடு முடிவடைகிறது. இதனால் அடுத்து தினகரன் என்ன செய்யப் போகின்றாரோ என்ற பதற்றம் எடப்பாடி அணிக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று அவசர அவசரமாக ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டியுள்ளனர்.

டிமாண்டு என்ன?
இதனிடையே இரு அணிகளும் இணைந்து விட்டால் டிடிவி தினகரனை அதிமுகவில் இருந்து முற்றிலும் விலக்கி விடலாம் என்று ஐடியாவும் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அணிகளிடையே முன் வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டு வருகிறது. அப்படி இணைப்பு ஏற்பட்டால் யார் யாருக்கு என்னென்ன பதவி வேண்டும் என்றும் டிமாண்டு வைக்கப்பட்டுள்ளது.

முதல்வர் பதவி
அதன்படி, இரு அணிகளும் இணைந்தால் ஓபிஎஸ்தான் அதிமுகவின் பொதுச் செயலாளர். எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் பதவியில் இருந்து இறங்காமல், அப்படியே நீடித்துக் கொள்வார் எனப் பெரிய பதவிகள் இரண்டையும் ஓபிஎஸ்ஸும் ஈபிஎஸ்ஸும் பிடித்துக் கொள்வார்கள்.

அமைச்சர் பதவி யாருக்கு
இது மட்டுமல்லாமல், தேமுதிகவில் இருந்து அதிமுகவிற்கு தாவி ஜெயலலிதாவின் தயவில் கல்வி அமைச்சராக வலம் வந்த மாஃபா பாண்டியராஜன், சசிகலா அணியில் இருந்து பின்னர் ஓபிஎஸ் அணிக்குத் தாவியவர். அவருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாம்.

தினகரனை உள்ளே விடக் கூடாது
இது தவிர, கட்சியை வழி நடத்தக் குழு ஒன்று அமைக்கப்பட உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இப்படி எல்லாம் செய்து தினகரனை எப்படியாவது வெளியே நிறுத்த வேண்டும் என்று இரு அணிகளும் திட்டமிட்டுள்ளது அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications