தேர்தல் ஆணைய அங்கீகாரம் இல்லாத தினகரன் கட்சி பதவி தருவதா? எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் கலகக்குரல்
தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படாத தினகரன் எனக்கு கட்சிப் பதவி தருவதா? என பண்ருட்டி எம்.எல்.ஏ. சத்யா பன்னீர்செல்வம் கொந்தளித்துள்ளார்.
சென்னை: அதிமுக மகளிர் அணி இணை செயலாளர் பதவிக்கு தம்மை டிடிவி தினகரன் நியமித்ததை ஏற்க முடியாது என பண்ருட்டி எம்.எல்.ஏ. சத்யா பன்னீர்செல்வம் கலகக் குரல் எழுப்பியுள்ளார்.
அதிமுகவின் 18 அமைப்பு செயலர்கள் உள்ளிட்ட பல்வேறு நியமனங்களை டிடிவி தினகரன் அறிவித்தார். எம்.எல்.ஏக்கள் பலருக்கும் கட்சி பதவியும் கொடுக்கப்பட்டிருந்தது.
எம்.எல்.ஏ எதிர்ப்பு
இந்த அறிவிப்பு வெளியான சிறிது நேரத்திலேயே அதிமுக மகளிர் இணை செயலராக நியமிக்கப்பட்டுள்ள பண்ருட்டி தொகுதி எம்.எல்.ஏ. சத்யா பன்னீர்செல்வம் தினகரனுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிவிட்டார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் சத்யா பன்னீர்செல்வம் கூறியதாவது:
அங்கீகாரம் இல்லாத தினகரன்
தேர்தல் ஆணையத்தால் அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளர் என அங்கீகரிக்கப்படாதவர் டிடிவி தினகரன். அதிமுகவின் மகளிர் அணி இணை செயலராக தினகரன் என்னை நியமித்ததை ஏற்க முடியாது.
பதவி ஏற்க முடியாது
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஜெயலலிதாவின் அரசு மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஆகையால் அதிமுக மகளிர் அணி இணை செயலர் பதவியை ஏற்கமாட்டேன்.
இவ்வாறு சத்யா பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
கலகக் குரல் வெடிக்கும்
தீவிர அரசியலுக்கு திரும்பி வந்து அதிரடி காட்டிய தினகரனுக்கு நிச்சயம் இது பின்னடைவாகவே கருதப்படுகிறது. சத்யா பன்னீர்செல்வத்தைத் தொடர்ந்து மேலும் பலரும் தினகரன் நியமனத்தை எதிர்த்து கலகக் குரல் எழுப்பலாம் என்றே கூறப்படுகிறது.