மொட்டையடித்து, மண் சோறு சாப்பிட்டு, 1000 பேருக்கு அன்னாதனம் தந்து... இவர் யாரென்று தெரிகிறதா?
கரூர்: ஜெயலலிதா முதல்வராக மீண்டும் பதவியேற்றுள்ளதைத் தொடர்ந்து கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அதிமுக எம்.எல்.ஏ. காமராஜ், மொட்டை போட்டு, மண் சோறு சாப்பிட்டு, நேர்த்திக் கடன் செலுத்தியதோடு, ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்தும் அந்தப் பகுதியை கலக்கியுள்ளார்.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ - எஸ்.காமராஜ் ஆவார். இவர் இது வரை மாதா மாதம் தனது எம்.எல்.ஏ ஊதியம் ரூ 55 ஆயிரத்தை நிதி உதவியாக திருநங்கைகள், தீ விபத்தில் பாதிக்கபட்டவர்கள், ஏழை விவசாயிகளின் மருத்துவ உதவி, ஹெச்.ஐ.வி யால் பாதிக்கப்பட்டவர்கள், நரிக்குறவர்கள், பம்பை வாசிப்பவர்கள் என கொடுத்து வருகிறார்.

மேலும் ஜெயலலிதா கைதாகி சிறைக்குப் போனது முதல் அவர் மீண்டும் முதல்வரானது வரை நாள் தோறும் மதிய நேரத்தில் ஏதாவது ஒரு கோயிலில் மண்சோறு சாப்பிட்டு கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆலயங்களிலும், சர்ச்சுகளிலும், மசூதிகளிலும் கரூர் மாவட்ட ஜெ பேரவை சார்பில் எண்ணற்ற வழிபாட்டையும், ஜெயலலிதா விடுதலையாவதற்கும், மீண்டும் முதல்வர் நாற்காலியில் உட்காரவும் நாள் தோறும் பலவிதமான நேர்த்திக்கடன்களை செய்து வந்தார்.

அங்கப்பிரதட்சணம், பால்குடம், தீர்த்தக்குடம் எடுத்தல், மண்சோறு சாப்பிடுதல், அக்னி சட்டி எடுத்தல் உள்ளிட்ட நேர்த்திகடன்களை கடமை தவறாமல் செய்து வந்தார். மற்ற அதிமுகவினரும்தான் இதைச் செய்து வந்தனர். என்ன ஒரு வித்தியாசம் என்றால் ரொம்ப விளம்பரம் செய்யாமல் சற்று அடக்கம் ஒடுக்கமாக செய்து வந்தார் காமராஜ்.

மேலும் மொட்டை போடுவதாகவும் அவர் வேண்டிக் கொண்டிருந்தார். இந்த நிலையில், தற்போது ஜெயலலிதா மீண்டும் முதல்வராகி விட்டதால் தனது முடியை காணிக்கையாக செலுத்தினார். மேலும் கோயில் முன் அமர்ந்து மணல்சோறு சாப்பிட்டு நேர்த்திக்கடனை நிறைவேற்றினார். பின்னர் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் செய்தார்.
இந்நிகழ்ச்சியில் அ.தி.மு,க வினர் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications