காசு பணம் துட்டு மணி மணி... அதிமுக எம்எல்ஏக்களுக்கு மறுபடியும் ஜாக்பாட்.. கரன்சி மழை கொட்டப்போகுதாம்
ஆட்சியை தக்க வைக்க அதிமுக எம்எல்ஏக்களுக்கு கரன்சி மழையை பொழிய வைக்கப் போகிறாராம் எடப்பாடி பழனிச்சாமி.
சென்னை: தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடந்தாலும் மூன்று அணிகளாக பிரிந்து கிடப்பதால் அதிமுகவினரே ஆட்சியை அனுபவிக்க முடியாமல் இருக்கின்றனர். எந்தப்பக்கம் யார் சாய்வார் என்ற நிலை இருப்பதால் எம்எல்ஏக்களை தக்கவைக்க கூவத்தூரில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றப் போகிறாராம் எடப்பாடி பழனிச்சாமி.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எதைப்பற்றியும் பேசாமல் நலத்திட்ட பணிகளை தொடக்கி வைப்பதில் கவனமாக இருக்கிறார். ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்திக்கொண்டிருக்கிறார். டிடிவி தினகரனோ தனக்கென்று ஒரு ஆதரவு வட்டத்தை உருவாக்கியுள்ளார்.
பெரும்பான்மை
135 எம்எல்ஏக்கள் அதிமுகவிற்கு இருந்தாலும் எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மையை இழந்து விட்டார் என்று எதிர்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். ஆனால் எம்எல்ஏக்களே ஆட்சியை கவிழ்க்க தயாராக இல்லை. காரணம், உடனடியாக இன்னொரு தேர்தல் வந்தால் சீட் கிடைக்குமா? சீட் கிடைத்தாலும் ஜெயிக்க முடியுமா என்ற சந்தேகம் எம்எல்ஏக்களுக்கு இல்லாமல் இல்லை.
எடப்பாடி பழனிச்சாமி திட்டம்
எந்த சூழ்நிலையிலும் ஆட்சியை இழந்து விடக்கூடாது என்று கவனமாக இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. இதற்காக கொங்கு மண்டல அமைச்சர்களுக்கு தனி அசைன்மெண்ட் கொடுத்திருக்கிறார். அதாவது கூவத்தூரில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதுதான்.
கொங்கு மண்டலம்
நம்ம இனத்தை சேர்ந்த ஒருவர் முதல்வராகியுள்ளார், இனி இப்படி ஒரு வாய்ப்பு வருவது அரிது. இருக்கும் 4 ஆண்டு காலத்திற்கும் ஆட்சியை நடத்த ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கொங்கு மண்டல எம்எல்ஏக்களிடம் பேசி வருகின்றனர்.
கரன்சி மழை
திருப்பூர், கோவை தொழிலாதிபர்கள் அமைச்சர்களிடம் கரன்சியை கொட்டி வருகிறார்களாம். அந்த பணத்தை வைத்து சண்டித்தனம் செய்யும் எம்எல்ஏக்களை சமாதானப்படுத்தலாம் என்று நினைக்கிறாராம் எடப்பாடி பழனிச்சாமி. எது எப்படியோ இனி அதிமுக எம்எல்ஏக்கள் வீட்டு வாசல்முன்பு போய் நல்ல காலம் பொறக்குது... கரன்சி மழை கொட்டப்போகுது என்று நள்ளிரவில் குடுகுடுப்பைக்காரன் சொல்வது போல கொங்கு மண்டல அமைச்சர்கள் சொன்னாலும் ஆச்சரியமில்லை.
எம்எல்ஏக்களிடம் பேச்சு
டிடிவி தினகரனை எம்எல்ஏக்கள் சந்திக்க ஆரம்பித்த போதே தலைமை செயலகத்தில் எம்எல்ஏக்களிடம் பேசினார் எடப்பாடி பழனிச்சாமி. எனக்கு இனி எந்த பதவியும் தேவையில்லை முதல்வர் நாற்காலியிலேயே உட்கார்ந்துட்டேன். தமிழக வரலாற்றில் முதல்வர்கள் பெயரில் என் பெயர் இடம் பிடித்து விடும். இப்போது தேர்தல் நடந்தாலும் நான் ஜெயித்து விடுவேன் என்று கூறியுள்ளார்.
சென்டிமெண்ட் அட்டாக்
இப்போது ஆட்சி கலைந்து தேர்தல் நடந்தால் உங்க பாடுதான் பெரும்பாடாகி விடும். போன தேர்தலுக்கு செலவு செய்த பணத்தையே இன்னும் எடுத்திருக்க மாட்டீங்க. இந்த சூழ்நிலையில் நீங்க வேற பக்கம் போய், ஆட்சி கவிழ்ந்த எனக்கு நஷ்டமில்லை தெரிஞ்சுக்கங்க என்று பேசினாராம்.
ஆட்சி நீடிக்கணும்
எடப்பாடி பழனிச்சாமியின் இந்த பேச்சுதான் பல எம்எல்ஏக்களின் மனதை தொட்டிருக்கிறது. எனவேதான். முதல்முறையாக எம்எல்ஏவான பலரும் தலைமைச் செயலகத்தில் முதல்வர் உடனான கூட்டம் முடிவடைந்த உடன், ஆட்சி நீடிக்க வேண்டும் என்று பேட்டி கொடுத்தனர்.
வேண்டாத தெய்வமில்லை
எப்படியாவது ஆட்சி நீடிக்கணும், எம்எல்ஏவாக 4 ஆண்டுகள் தொடரணும் என்று பலரும் கடவுளை வேண்டி வருகின்றனர். எம்எல்ஏக்களின் வேண்டுதல் பலிக்குமா? முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி நீடிப்பாரா? எல்லாம் மேலே இருப்பவர்களுக்கு மட்டுமே வெளிச்சம்.