7வது நாளாக எம்எல்ஏக்கள் சிறை.. 2500 போலீசார் குவிப்பு.. பதற்றத்தில் கூவத்தூர்
அதிமுக எம்எல்ஏக்கள் 7வது நாளாக கூவத்தூர் சொகுசு ரிசார்ட்டில் அடைக்கப்பட்டுள்ளனர். இன்று சொத்து குவிப்பு வழக்கு மீதான தீர்ப்பு வரும் நிலையில் சசிகலாவும் அவர்களுடன் தங்கி இருக்கிறார்.
சென்னை: அதிமுகவின் எம்எல்ஏக்களுடன் அக்கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலாவும் தங்கி இருக்கிறார். இன்று சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், கூவத்தூரில் 2500 போலுசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சசிகலாவிற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்பதற்காக அதிமுக எம்எல்ஏக்களை சென்னை அருகே உள்ள கூவத்தூர் சொகுசு ரிசார்டில் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 7 நாட்களாக இந்த இடத்திலேயே தங்க வைக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்களை 3 நாட்களாக தொடர்ந்து சசிகலா சந்தித்து பேசினார்.

3வது நாளாக நேற்று கூவத்தூர் சென்ற சசிகலா எம்எல்ஏக்களுடன் தங்கியுள்ளார். இதனிடையே, இன்று சசிகலா சம்பந்தப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு இன்று உச்ச நீதிமன்றத்தில் வரவிருக்கிறது. இதனையடுத்து, தமிழகம் முழுவதும் பதற்றம் நிலவி வருகிறது.
போலீசார் குவிப்பு
இதனைத் தொடர்ந்து, கூவத்தூரில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இங்கு சுமார் 5க்கும் மேற்பட்ட ஏடிஜிபிக்கள், 6 ஐஜி தலைமையில் சுமார் 2500 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இருந்து மரக்காணம் வரை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அனுமதி இல்லை
சொத்துக்குவிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு வருவதையொட்டி பல்வேறு மாவட்டங்களில் இருந்து அதிமுக தொண்டர்கள் சசிகலா தங்கியிருக்கும் கூவத்தூருக்கு வருவதாக செய்திகள் வெளியானது. இதனால் போலீசார் மேலும் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணிகள் அதிகப்படுத்தப்பட்டன. பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து கொண்டிருக்கும் அதிமுகவினரை திருப்பி அனுப்பும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
வாகன சோதனை
பதற்றமான சூழல் உருவாகியுள்ளதால், ஈ.சி.ஆர். சாலையில் வரும் ஒவ்வொரு வாகனமும் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. வெளியூரில் இருந்து வரும் அதிமுக தொண்டர்கள் திரும்பி அனுப்பப்படுகின்றனர். சந்தேகப்படும்படியாக உள்ள வாகனங்கள் ஓரம் கட்டப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது.
ரிசார்ட்டின் நிலை
சசிகலா மற்றும் அதிமுக எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள ரிசார்ட்டில் யாரும் இதுவரை அனுமதிக்கப்படவில்லை. அதிமுக அமைச்சர்கள், நிர்வாகிகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். மிக அதிகமாக போலீசார் குவிக்கப்பட்டு ரிசார்ட் பாதுகாப்பு வளையத்திற்குள் உள்ளது.
முக்கிய நிர்வாகிகள்
சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு வர உள்ள நிலையில் காலையில் இருந்து அதிமுகவைச் சேர்ந்த பல முக்கிய தலைவர்கள் ரிசார்ட்டுக்கு சென்று சசிகலாவை சந்தித்து வருகின்றனர். லோக் சபா துணை தலைவர் தம்பிதுரை, எம்பி நவநீதகிருஷ்ணன், அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் சென்று சசிகலாவிடம் ஆலோசனை நடத்தினர்.












Click it and Unblock the Notifications