அமைச்சர் சம்பத் விழாவை புறக்கணித்த எம்எல்ஏ-க்கள், எம்பி-க்கள்... அதிமுகவில் தொடரும் பனிப்போர்!
அமைச்சர் எம்சி சம்பத் கலந்து கொண்ட மாரத்தான் விழாவை அதிமுகவின் 4 எம்எல்ஏ-க்களும், 2 எம்பி-க்களும் புறக்கணித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை: கடலூரில் அமைச்சர் எம்சி சம்பத் கலந்து கொண்ட விழாவை எம்எல்ஏ-க்களும், எம்பி.க்களும் புறக்கணித்துள்ளது அதிமுக வட்டாரத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவில் ஓபிஎஸ் அணி தனியாக செயல்படும் நிலையில், எடப்பாடி அணியில் இருந்த சிலர் தினகரன் தலைமையில் தனி அணியாக செயல்படுவதாக கூறப்படுகிறது. அதிமுகவில் தற்போது உச்சகட்ட பனிப்போர் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி கடலூரில் மாரத்தான் நிகழ்ச்சியை அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், சிவி சண்முகம் உள்ளிட்டோர் தொடங்கி வைத்துவிட்டு சென்றனர். அதன்பின்னர் அந்த நிகழ்ச்சியில் அமைச்சர் எம்சி சம்பத் கலந்து கொண்டார்.
இதனால் அந்த விழாவை எம்.எல்.ஏக்கள் பாண்டியன், முருகுமாறன், கலைச்செல்வன், பன்னீர்செல்வம் ஆகிய 4 பேரும், எம்பிக்கள் அருண்மொழித்தேவன், சந்திரகாசி ஆகிய இருவரும் புறக்கணித்தனர். 4 அமைச்சர்களும் சமரச பேச்சுவார்த்தை நடத்தி சென்ற நிலையிலும் எம்எல்ஏ-க்களும், எம்பி.க்களும் விழாவை புறக்கணித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.