உள்ளூர் மக்களிடம் அத்துமீறும் மன்னார்குடி அடியாட்கள்.. கூவத்தூர் மக்கள் கொந்தளிப்பு!
கூவத்தூரில் உள்ள ஒரு ரிசார்ட்டில் சிறை வைக்கப்பட்டுள்ள அதிமுக எம்எல்ஏக்கள் மன்னார்குடி கோஷ்டிக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.
சென்னை: மாமல்லபுரம் அருகே உள்ள கூவத்தூர் ரிசார்ட் ஒன்றில், முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பயந்து மன்னார்குடி கோஷ்டி அதிமுக எம்எல்ஏக்களை அடைத்து வைத்துள்ளனர். இவர்கள் அனைவரும் மன்னார்குடி கோஷ்டிகளுக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற எம்எல்ஏக்கள் கூட்டத்திற்கு பின்னர், 3 சொகுசு பேருந்துகளில் எம்எல்ஏக்கள் அனைவரும் நேற்றிரவு அழைத்து கூவத்தூர் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டனர்.
நேற்றிரவு முதல் ரிசார்ட்டில் அடைத்து வைக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்கள், மன்னார்குடியில் இருந்து கொண்டு வரப்பட்ட அடியாட்கள் கொண்டு மிரட்டப்பட்டு வருகின்றனர். இதற்கு அடைத்து வைக்கப்பட்ட எம்எல்ஏக்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
நேற்று முழுவதும் எம்எல்ஏக்களின் போன்கள் அனைத்தும் அணைத்து வைக்கப்பட்டு, வெளியுலகத்தின் தொடர்பில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், எம்எல்ஏக்கள் தங்கள் எதிர்ப்பை கடுமையாக தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், எம்எல்ஏக்கள் இப்படி சிறைபிடித்து வைக்கப்பட்டதற்கு அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்களிடையே சசிகலா மற்றும் மன்னார்குடி கோஷ்டியினருக்கு கடும் அதிருப்தி கிளம்பியுள்ளது.