மோடியின் சொல்படி அதிமுக தமிழகத்தில் நாடகம் நடத்திவருகிறது : வைகோ
பாராளுமன்றத்தில் அதிமுக எம்பிக்கள் போராட்டம் நடத்துவதும் மோடியின் சதி நாடகத்தில் ஒரு அங்கம் என்று வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார்.
சென்னை : பாராளுமன்றத்தில் அதிமுக எம்பிக்கள் போராட்டம் நடத்துவதும் மோடியின் சதி நாடகத்தில் ஓர் அங்கம் தான் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், ஏப்ரல் 5ம் தேதி மாநிலம் தழுவிய வேலைநிறுத்தத்திற்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது.
இதற்கு அனைத்து மக்களும் ஆதரவு தர வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், அதிமுக மோடியின் திட்டப்படி தமிழ்மக்களை ஏமாற்றி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மோடியின் யோசனை
தமிழக காவிரி டெல்டா விவசாயிகளை நிரந்தரமாக நிர்மூலம் செய்யும் குறிக்கோளோடு மோடியின் யோசனையின்படி 2014ம் ஆண்டு டிசம்பர் மாதம் 7, 8 தேதிகளில் மத்திய அமைச்சராக உள்ள கர்நாடகத்தைச் சேர்ந்த அனந்த குமார் இல்லத்தில் கர்நாடகத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சி எம்.பி.க்கள், மத்திய அமைச்சர் சதானந்த கவுடா உள்ளிட்ட அமைச்சர்கள் அதில் பங்கேற்றனர். கர்நாடக அரசு மேகதாது, ராசிமணலில் அணைகள் கட்டிக்கொள்ளலாம் என்றும், வெளிப்படையாக மத்திய அரசு சுற்றுச் சூழல் அனுமதி கொடுக்காது என்றும் சுற்றுச் சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அக்கூட்டத்தில் உறுதி அளித்தார்.

தமிழ்நாட்டை அழிக்க முடிவு
தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரி டெல்டாவை நிரந்தரமாக அழிக்கும் படுபாதகத்தை மத்திய அரசு செய்யப் போகிறது என்பதைத் தெரிந்துகொண்ட நான் தஞ்சாவூர், நாகை, திருவாரூர் மாவட்டங்களில் கட்சிக் கொடி கட்டாமல் பல நாட்கள் மேகதாது, ராசி மணலில் அணைகளைக் கட்டவிடாமல் தடுப்பதற்கும், மீத்தேன் போன்ற நாசகாரத் திட்டங்களைத் தடுப்பதற்கும் விழிப்புணர்வுப் பரப்புரை மேற்கொண்டேன்.

பாராளுமன்றத்தின் முடிவு
பிப்ரவரி 22-ந்தேதி நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், உச்சநீதி மன்றத் தீர்ப்பின் முக்கியப் பகுதிகளை வாசித்துக் காட்டினேன். அதில் "காவிரி மேலாண்மை வாரியம் என்ற வார்த்தையே இல்லை. ஸ்கீம்-திட்டம் என்றுதான் இருக்கிறது. அப்படி அமையும் திட்டத்தையும் பாராளுமன்றம் விருப்பம்போல மாற்றிக்கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது."

பிரதமர் மோடியின் திட்டம்
நான் அன்று சொன்னதை, உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா நேற்றைக்கு வெளிப்படையாகவே சொல்லி விட்டார். ஸ்கீம் என்பதற்கு காவிரி மேலாண்மை வாரியம் என்று பொருள் அல்ல என்று கூறினார். எனவே பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கூடாது என்பதுதான் நரேந்திர மோடியின் திட்டம். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் தீர்ப்பு அந்த எண்ணத்தையே பிரதிபலிக்கிறது.

மத்திய அரசு அமைக்காது
நிலைமை இப்படி இருக்க, காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று இல்லாத ஊருக்குப் போகாத வழியைக் காட்டும் வகையில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் ஆர்ப்பாட்டம் என்ற சதி நாடகத்தை மோடியின் விருப்பப்படி நடத்தினார்கள். இன்றைய மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை ஒருபோதும் அமைக்காது என்பதை தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சியினரும், பொதுமக்களும் புரிந்து கொள்ள வேண்டுகிறேன்.

தமிழகத்தின் மாபெரும் அறப்போராட்டம்
தி.மு.க. தலைமையிலான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி ஏப்ரல் 5-ந் தேதி முழு அடைப்புப் போராட்டத்தை, தமிழகம் காக்கும் போராட்டமாகக் கருதி அனைத்துத் தரப்பினரும், குறிப்பாக பேருந்து ஓட்டுநர்களும், வணிகப் பெருமக்களும், தொடர்வண்டி ஓட்டுநர்களும் பங்கேற்க வேண்டுகிறேன். இந்த முழு அடைப்புப் போராட்டத்தில் பங்கேற்கிற தோழர்கள் ஆத்திர உணர்ச்சிக்கும், வன்முறைக்கும் இடம் கொடுக்காமல் தமிழக வரலாறு கண்டிராத அறப்போராட்டமாக நடத்திக் காட்ட பணிவுடன் வேண்டுவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications