அதிமுகவினர் பதவியை ஏலம் போட்டு வருகின்றனர்.. ஸ்டாலின் சரமாரி விளாசல்
தமிழகத்தில் அதிமுகவினர் பதவியை ஏலம் போட்டு வருவதாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
திருவாரூர்: தமிழகத்தில் அதிமுகவினர் பதவியை ஏலம் போட்டு வருவதாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். ஆட்சியை தக்க வைக்க அதிமுகவினர் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் சாடியுள்ளார்.
தமிழகம் முழுவதும் விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக தலைமையில் எதிர்க்கட்சிகள் இன்று முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டன. இதன் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.
பல இடங்களில் விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சியினர் ரயில் மறியல் மற்றும பஸ் மறியல்களில் ஈடுபட்டனர். பெரும்பாலான இடங்களில் தனியார் வாகனங்கள் இயக்கப்படவில்லை.
வெங்கையா தெரியாமல் பேசுகிறார்
திருவாரூரில் நடைபெற்ற போராட்டத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், விவசாயிகளுக்கு ஆதரவாக நடைபெற்ற கடையடைப்பு போராட்டம் 100 சதவீதம் வெற்றி பெற்றதாக அவர்கூறினார். வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது விவசாய கடன் ரூ.10 ஆயிரம் கோடியை தள்ளுபடி செய்தார் மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது ரூ.60 ஆயிரம் கோடி விவசாய கடனை தள்ளுபடி செய்தார். ஆனால் வெங்கையாநாயுடு இதுபற்றி தெரியாமல் பேசி வருகிறார் என்றார்.
பதவியை ஏலம் விடுகின்றனர்
தமிழகத்தில் பதவியை ஏலம் விடும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. ஜெயக்குமார் நிதி அமைச்சர் பதவியை ஓ.பன்னீர்செல்வத்திற்கு தருவதாக கூறுகிறார். கவர்னர் தான் பதவிப்பிரமாணம் செய்து வைக்க வேண்டும். இப்படி பதவியை ஏலம்போடக்கூடாது. ஆட்சியை தக்கவைக்க அ.தி.மு.க.வினர் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பிரிந்து சென்ற அணியினருடன் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.
மதுக்கடைகளை திறக்க ஆர்வம்
தமிழகத்தில் குடிநீர் பிரச்சனை அதிகமாக உள்ளது. இதனை தீர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்காமல் மூடப்பட்ட மதுபான கடைகளை திறக்க ஆர்வம் காட்டி வருகிறது. மத்தியஅரசு மீண்டும் இந்தியை திணிக்க முயற்சிக்கிறது. தொடர்ந்து இந்த முயற்சியில் ஈடுபட்டால் அதனை எதிர்த்து பெரியஅளவில் போராட்டம் நடத்துவோம்.
4 கி.மி நடக்க வைத்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட எங்களை போலீசார் கைது செய்தனர். எங்களை அழைத்து செல்ல போதிய வாகன வசதி இல்லாததால் 4 கி.மீட்டர் தூரம் நடக்க வைத்து தனியார் மண்டபத்துக்கு கொண்டு வந்துள்ளனர். இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.