"அதிமுக செல்போனால்" விவசாயத்தை காப்பாற்ற முடியாது: ஜி.ராமகிருஷ்ணன்
சென்னை: அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளபடி, செல்போன் கொடுப்பதன் மூலம் விவசாயத்தைக் காப்பாற்ற முடியாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியில் இடம் பெற்றுள்ளது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. தேமுதிக, தமாகா, மக்கள் நலக்கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், உடுமலையில் ஆணவக்கொலை செய்யப்பட்ட சங்கரின் மனைவி கௌசல்யா தற்கொலைக்கு முயன்று கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை நேரில் கண்டு தைரியம் தெரிவித்தார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:-
கடந்த 20ஆண்டுகளாக தாராளமய கொள்கையால் விவசாயம் புறக்கணிக்கபட்டு வருகிறது. கடந்த 10 வருடங்களில் மட்டும் 14 லட்சம் ஏக்கர் விவசாய நிலப்பரப்பு குறைந்துள்ளது. உற்பத்தி 2.88 சதவீதம் குறைந்துள்ளது. விவசாய நிலங்கள் ரியல் எஸ்டேட்களாக மாற்றும் போது அரசு கொள்கை உருவாக்கம் செய்ய வேண்டும்.
விவசாய நிலங்களை பாதுகாக்க நில பயன்பாட்டுச்சட்டம் கொண்டு வரப்பட வேண்டும். விவசாய விலை பொருளுக்கு உரிய விலைகிடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதிமுக தேர்தல் அறிக்கையில் விவசாய விலைபொருளுக்கு நியாயவிலை கொடுப்போம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. என்ன கொள்கையின் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யப்படும் என்பதை சொல்லவில்லை. செல்போன் கொடுப்பதன் மூலம் விவசாயத்தை காப்பாற்ற முடியாது. அரசு நிர்ணயிக்கும் விலையை சர்க்கரை ஆலைகள் கொடுப்பதில்லை.
இந்தியாவில் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் செயல் அதிகமாக இருப்பது தமிழகத்தில்தான். பணம் கொடுப்பதை தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். தற்போதைய தேர்தல் அதிகாரிகளின் நடவடிக்கையானது போதுமான நடவடிக்கையாக இல்லை. தேர்தல் ஆணையம் இதில் கவனம் செலுத்த வேண்டும்.
தாதுமணல் கொள்ளை தொடர்பாக பேசும் ஜெயலலிதா, ககந்தீப்பேடியின் மணல் கொள்ளை தொடர்பாக அறிக்கையினை சட்டமன்றத்தில் வைக்கவில்லை. தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் நம்பர் ஓன் கோடிஸ்வர வேட்பாளர் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா தான்' என அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications