ஜெ.வுடனான சந்திப்பு மீண்டும் ரத்து? கூட்டணி குறித்து "விரைவில்" அறிவிப்பு- ஜி.கே.வாசன்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் கூட்டணி தொடர்பாக முதல்வர் ஜெயலலிதாவுடனான தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனின் சந்திப்பு திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் யாருடன் கூட்டணி என்பது குறித்து "விரைவில்" அறிவிப்பேன் என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட த.மா.கா. வியூகம் வகுத்தது. இதற்காக அ.தி.மு.க.வுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தது. போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை மற்றும் எந்த சின்னத்தில் போட்டியிடுவது? என்பதை முடிவு செய்வதில் இழுபறி ஏற்பட்டது.
அ.தி.மு.க. தரப்பில் இரட்டை இலை சின்னத்தில் த.மா.கா. போட்டியிடவேண்டும் என்று நிர்பந்திக்கப்பட்டது. ஆனால் த.மா.கா. தரப்பில் இதனை ஏற்க மறுத்தனர். இதனால் கூட்டணி பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.
அதிமுக அதிருப்தி
இதனிடையே த.மா.கா. தங்களுக்கு தென்னந்தோப்பு சின்னத்தை அறிமுகப்படுத்தியது. இது அ.தி.மு.க.வுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்தநிலையில் கடந்த திங்கட்கிழமை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா 227 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல், கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.
மீண்டும் பேச்சுவார்த்தை
இதையடுத்து அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்து சட்டசபை தேர்தலில் போட்டியிடும் த.மா.கா.வின் கனவு தகர்ந்ததாக கருதப்பட்டது. இதனிடையே அ.தி.மு.க.வுடன் மீண்டும் பேச்சுவார்த்தையை த.மா.கா. நடத்தியது. த.மா.கா.வுக்கு அதிமுக 15 தொகுதிகள் வரை ஒதுக்க முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.
மீண்டும் சந்திப்பு ரத்து?
இதை ஏற்று இன்று ஜெயலலிதாவை ஜி.கே.வாசன் சந்திக்கக் கூடும் எனவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் இந்த சந்திப்பு திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.
விரைவில் அறிவிப்பு
இதனிடையே சென்னை தேனாம்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய வாசன், கட்சியின் எதிர்காலம் கருதி கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும். யாருடன் கூட்டணி என்பதை விரைவில் அறிவிப்போம் என்றார்.