ரூ89 கோடி ஆவண விவகாரம்.... எல்லாமே பித்தலாட்டமாம்... சாடுகிறது நமது எம்ஜிஆர்
விஜயபாஸ்கர் வீட்டு வருமான வரித்துறை சோதனையில் ரூ89 கோடி பணப்பட்டுவாடா ஆவணம் சிக்கியது என்பது பித்தலாட்டம் என சாடியுள்ளது அதிமுகவின் டாக்டர் நமது எம்ஜிஆர் நாளேடு.
சென்னை: அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை சோதனையின் போது ஆர்கே நகரில் ரூ89 கோடி பணம் பட்டுவாடா செய்யப்பட்டதற்கான ஆவணம் சிக்கியது என்பதே பித்தலாட்டம் என சாடியுள்ளது டாக்டர் நமது எம்ஜிஆர் நாளேடு.
இது தொடர்பாக நமது எம்ஜிஆர் நாளேட்டில் எழுதப்பட்டுள்ளதாவது:
89 கோடி ரூபாயை வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ததாக ஒரு காகிதத்தைக் காட்டி, அதையும் வருமான வரித்துறை சோதனையின்போது கைப்பற்றியதாகவும், பின்பு அந்த காகிதங்களை ஏதோ பிளாக்கில் சினிமா டிக்கெட் விற்பதுபோல ஊடகங்களுக்கு கசியவிட்டதாகவும், பழியைப் பாட்டு, இடைத் தேர்தலை நிறுத்துவதற்கு மக்களிடம் காரணம் கற்பிக்கிறது இந்திய தேர்தல் ஆணையம்.
|
உதிரிதாள் ஆவணம்
ஒரு உதிரித் தாளில் ஒருவரின் பெயரை குறிப்பிட்டு, அவருக்கு இவ்வளவு நான் பணம் கொடுத்திருக்கிறேன் என்பதொன்றே ஏற்றுக்கொள்ளப்படுகிற ஆவணமாம். அப்படி என்றால், அவனவன் தன் வீட்டு டைரிகளிலும், நோட்டுகளிலும் பிடிக்காதவன் பெயரில் பெருத்த தொகையை இப்போதே எழுதி வைத்துக்கொள்ள வேண்டியதுதான்.

சகாரா குழும சோதனை
இவ்வளவு ஏன், சகாரா குழுமங்கள் மீதான வருமான வரிச் சோதனையின்போது பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களில் ஒன்றான எக்ஸல் ஷீட் ஒன்றில் அப்போதைய குஜராத் முதலமைச்சரும், இப்போதைய பிரதமருமான நரேந்திர மோடிக்கு ரூ. 55 கோடி ரூபாய் பணம் கொடுக்கப்பட்டதாக பதிவிடப்பட்டிருந்தது. இதை முன்வைத்து வழக்குபோட முனைந்தபோது, இதுபோன்ற காகிதங்களையெல்லாம் உரிய ஆவணங்களாக ஏற்றுக்கொள்ள முடியாது என்று உச்சநீதிமன்றம் தூக்கி வீசியது வரலாறு.

கேவலத்திலும் கேவலம்
அவ்வாறிருக்க ஆர்.கே.நகர் இடைத் தேர்தலை நிறுத்துவதற்கு திட்டமிட்டே ஒரு பித்தலாட்டப் பேப்பரை தயாரித்து மோசடி செய்திருக்கிறார்கள். இதனை ஏற்றுக்கொண்டு இந்திய தேர்தல் ஆணையமும் இடைத் தேர்தலுக்கு தடை போட்டது கேவலத்திலும் கேவலம் அல்லவா!

பொய்யை சொன்னாலும்...
எனவே, பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் சொன்னதுபோல், "பொய்யைச் சொன்னாலும் பொருந்தச் சொல்லுங்கடா போக்கத்தப் பசங்களா" என்றுதான் இவர்களை சாடத் தோன்றுகிறது. இவ்வாறு நமது எம்ஜிஆர் நாளேட்டில் எழுதப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications