இன்னோவா காரை ஒப்படைச்சிடுங்க... நாஞ்சில் சம்பத்திற்கு அதிமுக கெடு!
இன்னோவா காரை நாளைக்குள் ஒப்படைத்துவிடுமாறு நாஞ்சில் சம்பத்திற்கு அதிமுக கெடு விதித்துள்ளது.
Recommended Video

சென்னை : இன்னோவா காரை நாளைக்குள் ஒப்படைக்குமாறு தினகரன் ஆதரவாளர் நாஞ்சில் சம்பத்திற்கு அதிமுக கெடு விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கட்சி அலுவலகத்தில் நாளை எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சி நடைபெறும் நிலையில் காரை திரும்ப ஒப்படைக்க நாஞ்சில் சம்பத் வருவார் என்று கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மதிமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த நாஞ்சல் சம்பத்தை கட்சியின் பேச்சாளராக நியமித்ததோடு அவருக்கு இன்னோவா காரையும் கட்சியின் சார்பில் பரிசாக அளித்தார் ஜெயலலிதா. இதனால் நாஞ்சில் சம்பத்திற்கு இன்னோவா சம்பத் என்று சமூக வலைதளங்கள் அடைமொழி தந்தன.
2016 சட்டமன்ற தேர்தலின் போது இந்த இன்னோவா காரில் தான் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் நாஞ்சில் சம்பத். இந்நிலையில் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு சசிகலா கட்சியின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து இன்னோவா காரையும் கட்சி அலுவலகத்தில் விட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

சசிகலாவிடம் காரை பெற்ற சம்பத்
இதனையடுத்து சசிகலா சமாதானம் பேசியதையடுத்து, மீண்டும் இன்னோவா காரை பெற்றுக் கொண்டார் நாஞ்சில் சம்பத். அதோடு சசிகலா, தினகரனின் தீவிர ஆதரவாளராக அப்போது முதல் நாஞ்சில் சம்பத் செயல்பட்டு வருகிறார்.

காரை ஒப்படைக்க அதிமுக கெடு
இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா வழங்கிய காரை பயன்படுத்த நாஞ்சில் சம்பத்திற்கு இனியும் தகுதி இல்லை என்று அதிமுகவினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். ஆர்கே நகர் தேர்தல் முடிவுக்குப் பிறகு கட்சியில் இருந்து நாஞ்சில் சம்பத் நீக்கப்பட்ட நிலையில், நாளைக்குள் காரை ஒப்படைக்குமாறு அவருக்கு அதிமுக தலைமை கெடுவிதித்துள்ளதாக தெரிகிறது.

நாளை விறுவிறு க்ளைமாக்ஸ்
நாளை கட்சி அலுவலகத்தில் எம்ஜிஆர் பிறந்தநாளை முன்னிட்டு ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அப்போது தான் அங்கு வந்து காரை ஒப்படைப்பதாக நாஞ்சில் சம்பத் கூறியுள்ளதாக தெரிகிறது. இதனால் கட்சி அலுவலகத்தில் நாளை களேபரக் காட்சிகள் அரங்கேறும் என்று தெரிகிறது.

வீட்டை ஒப்படைக்கவும் சம்பத்திற்கு கெடு
இதே போன்று அரசு சார்பில் பெசன்ட் நகரில் நாஞ்சில் சம்பத்திற்கு தமிழறிஞர் ஒதுக்கீட்டின் கீழ் அளிக்கப்பட்டுள்ள வீட்டையும் ஒப்படைக்க கெடு விதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதிமுகவின் இந்த கெடுபிடிக்கு நாஞ்சில் சம்பத் என்ன பதில் அடி கொடுக்கப் போகிறார் என்பதே தற்போதைய அரசியல் பரபரப்பாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications