பால் பாக்கெட், சாக்லேட்டோடு இரட்டை இலைச் சின்னம் விநியோகம்: குளித்தலையில் பரபரப்பு
குளித்தலை: பெரம்பலூர் லோக் சபா தொகுதிக்கு உட்பட்ட குளித்தலையில் காலையில் பால் பாக்கெட், சாக்லேட்டோடு இரட்டை இலைச் சின்னம் விநியோகிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குளித்தலை நகராட்சியின் 8-வது வார்டு பகுதியில் உள்ள 500-க்கும் மேற்பட்ட வீடுகளின் முன்பு, இன்று அதிகாலை அரை லிட்டர் பால்பாக்கெட் ஒன்று, முதல்வர் ஜெயலலிதா படம் உள்ள கவரில் 2 சாக்லைட்டுகள் மற்றும் பிளாஸ்டிக் இரட்டை இலை சின்னம் ஆகியவை இருந்தன. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் மிகுந்த ஆச்சரியம் அடைந்தனர்.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த சிலர், குளித்தலை ஆர்.டி.ஒ. சித்திரை ராஜனிடம் புகார் செய்தனர். ஆனால் பலர் அதனை எடுத்துக்கொண்டனர்.
பொதுமக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், ஆர்.டி.ஓ. சித்திரைராஜன், மதியழகன், வி.ஏ.ஒ. குமாரபாண்டியன் ஆகியோர் குளித்தலை 8-வது வார்டு பகுதிக்கு விரைந்து வந்து, மர்ம நபர்களால் விநியோகிக்கப்பட்ட பொருட்களை கைப்பற்றினர்.
இதுகுறித்து அப்பகுதி மக்களிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். பால் பாக்கெட்டுடன் பணமும் விநியோகிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ஆனால் இதற்கு ஒத்துழைக்க அப்பகுதி மக்கள் மறுத்துவிட்டனர்.
இதுகுறித்து குளித்தலை போலீசில் அதிகரிகள் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து வழக்குப்பதிவு செய்து பால் பாக்கெட் விநியோகம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications