‘இறங்கு தாயே இறங்கு...’ சாமியாடிய அதிமுக பெண் வேட்பாளரை ஆசுவாசப்படுத்திய பூசாரி
ஸ்ரீவில்லிபுத்தூர்: வாக்குச் சேகரிக்க சென்ற இடத்தில் அதிமுக பெண் வேட்பாளர் சாமி வந்து ஆடியதால் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகம் மற்றும் புதுவையில் ஒரே கட்டமாக வரும் 24ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெறுவதையொட்டி தேர்தல் பிரச்சாரம் களை கட்டியுள்ளது. கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அனல் பறக்க தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர் கட்சியினர்.
அந்தவகையில், தென்காசி தொகுதி அதிமுக வேட்பாளராக வசந்தி முருகேசன் போட்டியிடுகிறார். இவர் நேற்றுமுன்தினம் விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் வாக்குச் சேகரித்தார். இரவு 8.30 மணிக்கு மல்லி அருகே தூளிப்புதூர் பகுதியில் பிரசாரம் செய்து கொண்டிருந்த வசந்தியை அங்குள்ள காளியம்மன் கோயிலுக்கு சாமி கும்பிட வருமாறு தொண்டர்கள் அழைத்துச் சென்றனர்.
கோயிலில் இருந்த பக்தர்கள் உரத்த குரலில் பக்திப் பாடல்கள் பாடியவாறு இருந்தனர். இதனால் மெய் மறந்து போன வேட்பாளர் வசந்தி, திடீரென அருள் வந்து ஆடத் துவங்கியுள்ளார். வேட்பாளர் சாமியாடியதைக் கண்ட அவரது கட்சித் தொண்டர்கள் பக்தி பரவசமடைந்தனராம்.
இதற்கிடையே வாக்குச் சேகரித்த பெண் வேட்பாளர் அருள் வந்து கோவிலில் சாமி ஆடிய தகவல் அறிந்து அப்பகுதி மக்கள் அங்கு குவிந்தனர்.
பின்னர், சூடம் ஏற்றி, விபூதியை அள்ளி தலையில் வீசிய படியே, ‘இறங்கு தாயே... இறங்கு; இறங்கு தாயே... இறங்கு!' என்று ஆவேசமாக பூசாரி கூறிக் கொண்டே, வேட்பாளரின் நெற்றியில் விபூதியை அள்ளிப் பூசவும் வசந்தி முருகேசன் கொஞ்சம், கொஞ்சமாக நார்மலுக்கு திரும்பி அமைதியானார்.
எனினும், வாக்குக் கேட்டு வந்த இடத்தில் பெண் வேட்பாளர் ஒருவர் சாமி வந்து ஆடியதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.