இரட்டை இலைக்கு லஞ்சம் - மன்னார்குடி மாஜி பொதுப்பணித்துறை அதிகாரியிடம் போலீஸ் கிடுக்குப்பிடி விசாரணை
இரட்டை இலை சின்னத்தைப் பெற தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் முக்கிய திருப்பமாக மன்னார்குடியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை அதிகாரி மோகனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்ற
சென்னை: இரட்டை சிலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறப்படும் விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. சென்னை ஆதம்பாக்கத்தில் மன்னார்குடியை சேர்ந்த ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை அதிகாரி மோகனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியுள்ளது. இரட்டை இலை சின்னத்தை மீட்க சுகேஷ் சந்திரசேகர் என்ற இடைத்தரகர் வாயிலாக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் அளிக்க முயன்றதாக, டிடிவி தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜுனா மற்றும் உதவியாளர் ஜனார்த்தனன் ஆகியோரை டெல்லி குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்திருந்தனர்
டிடிவி தினகரன் மற்றும் அவரது நண்பர் மல்லிகார்ஜுனா ஆகியோரை ஐந்து நாட்கள் கஸ்டடியில் எடுத்துள்ள டெல்லி போலீசார், இருவரையும் நேற்று சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தினகரனின் வீடு, அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இரண்டாவது நாளாக இன்றும் விசாரணை நடைபெறுகிறது.

கொச்சி வழியாக...
நேற்று நடத்திய விசாரணையின் போது, தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு 50 கோடி வரையில் லஞ்சம் அளிக்க தினகரனுக்கு திருச்சியைச் சேர்ந்த தொழிலதிபர் உதவியதாகவும், முதற்கட்டமாக ஹவாலா முறையில் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகருக்கு கொச்சி வழியாக 10 கோடி ரூபாய் வரை பணம் அளிக்கப்பட்டதாகவும் கூறியதாக தெரிகிறது. இதனையடுத்து தினகரனை, விஜயவாடா, கொச்சிக்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளனர்.

ஏஜெண்ட் கைது
இந்நிலையில் ஹவாலா ஏஜெண்ட் நரேஷ் என்பவரை டெல்லி காவல்துறையினர் இன்று காலை கைது செய்துள்ளனர். தாய்லாந்திலிருந்து டெல்லிக்கு வந்த நரேஷை, விமான நிலையத்தில் வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து நரேஷை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி போலிசார் முடிவெடுத்துள்ளனர்.

மாஜி அதிகாரி
இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் மேலும் பலர் சிக்கலாம் என கூறப்பட்டது. இதனிடையே சென்னை ஆதம்பாக்கம் திருவள்ளுவர் நகரில் மன்னார்குடியை சேர்ந்த ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை அதிகாரி மோகனிடம் டெல்லி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பலர் சிக்குவர்?
இரட்டை இலை சின்னம் பெறுவதற்கு லஞ்சம் கொடுத்த விவகாரத்தில் மோகன் பங்கு என்ன என்றும், பணத்தை ஹவாலா ஏஜெண்ட்டிடம் கொடுத்தது மோகனா என்றும் அவரது வீட்டில் டெல்லி போலீசார் விசாரணை நடத்துகின்றனர். மோகனைத் தொடர்ந்து மேலும் பலரும் சிக்குவர் என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications