ஜெயலலிதா நலம்... மகிழ்ச்சியில் 108 தேங்காய் உடைத்த அதிமுக மகளிரணி...
ஜெயலலிதா உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறியதைக் கேட்டு மகிழ்ச்சியடைந்த அதிமுக மகளிரணியினர் 108 தேங்காய்களை உடைத்து உற்சாகமடைந்தனர்.
சென்னை: கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி முதலமைச்சர் ஜெயலலிதா, உடல் நலக்குறைவால் சென்னை ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. கடந்த 55 நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார் ஜெயலலிதா. சசிகலா, இளவரசி, மருத்துவர்கள் தவிர வேறு யாரும் ஜெயலலிதாவை சந்திக்க முடியவில்லை.
முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்து வருவதாக டாக்டர்கள் சில தினங்களுக்கு முன்பு கூறினர். இதைக் கேட்டு மகிழ்ச்சியடைந்த அதிமுகவினர் 108 தேங்காய் உடைத்து வேண்டுதல் நிறைவேற்றினர்.
மருத்துவ குழுவினர்
அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள் குழு, லண்டன் டாக்டர் ரிச்சர்ட் ஜான்பீலே, சிங்கப்பூரைச் சேர்ந்த பெண் பிசியோதெரபிஸ்ட் நிபுணர்கள், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் ஆகியோரின் சிறப்பான சிகிச்சையால், முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்து வருகிறது. இதனை அப்பல்லோ மருத்துவமனையின் தலைவர் பிரதாப் ரெட்டியும் கூறியுள்ளார்.
ஜெயலலிதா உடல் நலம்
ஜெயலலிதா உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, இந்த வார இறுதியில் அவரை, தனி வார்டுக்கு மாற்ற திட்டமிட்டுள்ளனர். அவருக்கான தனி அறையும் தயாராகி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. செயற்கை சுவாசக் கருவி இன்றி முதல்வர் சுவாசித்தார் என்றும், நடந்து பயிற்சி பெற்று வருகிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுகவினர் பிரார்த்தனை
முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள செய்தி அறிந்ததும், அதிமுகவினர் கொண்டாடி வருகின்றனர். அவர் பூரண உடல் நலம் பெற்று விரைவில் வீடு திரும்ப வேண்டும் என அப்பல்லோ மருத்துவமனை முன்பு அதிமுகவினர் சிறப்பு பிரார்த்தனைகளை நடத்தினர்.
உற்சாக மகளிரணி
அப்பல்லோ மருத்துவமனை முன்பு திரண்ட அதிமுக மகளிரணியினர் அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடத்தினர். பின்னர் 108 தேங்காய்களை உடைத்தனர். ஜெயலலிதா உடல்நிலை முன்னேற்றம் அடைந்த செய்தியை அனைவருக்கும் கூறி, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இதுநாள் வரை சோகத்தில் இருந்த அதிமுகவினர் இப்போது மகிழ்ச்சியுடன் உற்சாகமாக அப்பல்லோ முன்பு வலம் வருகின்றனர்.