அத்வானி பைப் வெடிகுண்டு வழக்கு... சென்னைக்கு மாறுகிறது
மதுரை: பாஜக மூத்த தலைவர் அத்வானியைக் கொல்ல கடந்த 2011ம் ஆண்டு மதுரை அருகே திருமங்கலத்தில் பைப் வெடிகுண்டு வைக்கப்பட்டது தொடர்பான வழக்கை சென்னை கோர்ட்டுக்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
பாரதீய ஜனதா மூத்த தலைவர் அத்வானி கடந்த 2011-ம் ஆண்டில் ரதயாத்திரை மேற்கொண்டார். அவர் மதுரைக்கு வந்து அங்கிருந்து தென் மாவட்டங்களுக்கு புறப்பட்டார். இந்த சமயத்தில் அவரது யாத்திரை செல்லும் வழியான திருமங்கலம் ஆலம்பட்டி அருகே பாலத்தின் அடியில் வைக்கப்பட்டிருந்த பைப் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது.

இந்த சம்பவத்தை அடுத்து கொலை முயற்சி வழக்குபதிவு செய்யப்பட்டு, சிறப்பு பிரிவு போலீசார் விசாரணை செய்து வந்தனர். இந்த வழக்கில் போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், முகமது அனீபா என்ற தென்காசி அனீபா, அப்துல்லா என்ற அப்துல் ரகுமான், இஸ்மத், ஹக்கீம் என்ற கருவா ஹக்கீம் ஆகிய 6 பேர் முக்கிய குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்.
இந்த நிலையில், மதுரை சுண்ணாம்புக்காரத் தெருவைச் சேர்ந்த சுரேஷ் (35) என்பவர் கடந்த ஜூன் 26ம் தேதி இரவில் வெட்டிக் கொல்லப்பட்டார். இவர் பால் கடை நடத்தி வந்தவர் ஆவார். இந்த வழக்கிலும், போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக் மற்றும் புதூர் அப்துல், நெல்பேட்டை தவ்பீக் உள்பட பலருக்கு தொடர்பு இருந்தது தெரியவந்தது. அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இந்த இரு வழக்குகளும் சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டன. இந்த வழக்குகள் தொடர்பான விசாரணை மதுரை 4-வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நடந்து வந்தது.
இந்த வழக்குகளின் முக்கிய குற்றவாளிகளான போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக் ஆகியோர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். எனவே அத்வானி வெடிகுண்டு வழக்கும், பால்கடை சுரேஷ் கொலை வழக்கும் பூந்தமல்லி கோர்ட்டுக்கு இன்னும் ஓரிரு வாரங்களில் மாற்றப்பட உள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications