'பிரதமர் மோடிக்கு வழக்கம் போல ஒரு "காவிரி" லெட்டர் பார்சேல்....': அசராமல் அனுப்பும் ஓ.பி.எஸ்
சென்னை: காவிரியின் குறுக்கே கர்நாடகா அணை கட்டுவதைத் தடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஓ.பி.எஸ். வழக்கம் போல ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.
அக்கடிததத்தில் முதல்வர் ஓ.பி.எஸ். கூறியுள்ளதாவது:
காவிரி நதிநீர் தொடர்பாக இறுதி தீர்ப்பு வெளியிடப்பட்ட பிறகும் கர்நாடக அரசு அதை மீறும் வகையில் மீண்டும், மீண்டும் செயல்படுவது பற்றி உங்கள் கவனத்துக்கு கொண்டு வர இந்த கடிதத்தை எழுதுகிறேன். கர்நாடக அரசு காவிரி குறுக்கே மேகதாதுவில் இந்திய அரசு, தமிழக அரசு அல்லது காவிரி நதிநீர் ஒழுங்குமுறை ஆணையம் உள்ளிட்ட யாரிடமும் அனுமதி பெறாமல் அணை கட்டும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. இதற்காக கர்நாடக அரசு நிதி ஒதுக்கீடு செய்திருப்பதாக பத்திரிகைகளில் தகவல் வெளியாகியுள்ளது.

காவிரி நதி குறுக்கே எந்த ஒரு திட்டத்தையும் தமிழக அரசு ஒப்புதல் பெறாமல் தொடங்கக் கூடாது என்று எங்கள் கட்சி தலைவி ஜெயலலிதா ஏற்கனவே பல தடவை வலியுறுத்தி இருப்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். 12.11.2014 அன்று நானும் உங்களுக்கு எழுதிய கடிதத்தில் காவிரியில் மேகதாதுவில் அணை கட்ட உலகளாவிய தொழில்நுட்ப யோசனை கேட்டிருப்பது பற்றி தெரிவித்திருந்தேன்.
மேலும் தமிழ்நாடு ஒப்புதல் பெறாமல் காவிரியில் கர்நாடகம் நீர்ப்பாசனம், மின்உற்பத்தி, குடிநீர் உள்ளிட்ட எந்த திட்டங்களையும் தொடங்காமல் இருக்க அறிவுறுத்துமாறு வேண்டுகோள் விடுத்திருந்தேன்.
கர்நாடக அரசு மேகதாது பகுதியில் அணை கட்டும் பணியைத் தொடரக் கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டில் 18.11.2014 அன்று தமிழக அரசு மனு செய்துள்ளது. மேலும் தமிழக சட்டசபையில் 5.12.2014 அன்று மேகதாதுவில் கர்நாடகம் அணை கட்டுவதை மத்திய அரசு தடுக்க வலியுறுத்தி தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
கர்நாடக அரசு காவிரி குறுக்கே மேகதாது பகுதியில் இரண்டு அணைகள் கட்டுவதற்கு மேற்கொண்டுள்ள முயற்சியானது 5.2.2007-ம் ஆண்டு காவிரி நதிநீர் ஆணையம் வெளியிட்ட இறுதி தீர்ப்புக்கும், 19.2.2013-ல் மத்திய அரசு வெளியிட்ட அரசாணைக்கும் எதிரானதாகும். கர்நாடகாவின் நடவடிக்கை காவிரியில் தமிழகம் பெறும் காவிரி நதி நீரை பாதிப்பதாக அமையும்.
இந்த நிலையில் காவிரி குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு சட்ட விரோதமாக அணை கட்டுவதை தடுத்து நிறுத்தும் வகையில், அம்மாநில அரசிடம் மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும் என்று மீண்டும் ஒரு தடவை உங்களிடம் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். மேலும் தமிழகம் ஒப்புதல் பெறாமல் காவிரி நதி குறுக்கே எந்த திட்டத்தையும் கர்நாடக அரசு செய்யாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான இறுதி உத்தரவு 19.2.2013 அன்று மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்ட பிறகும் அதை செயல்படுத்த மத்திய அரசு காவிரி நிர்வாக வாரியம் மற்றும் காவிரி நதிநீர் ஒழுங்கு முறை குழு எதையும் அமைக்காதது பற்றி எங்கள் கட்சி தலைவி பல தடவை மீண்டும், மீண்டும் வலியுறுத்தியும், அந்த அமைப்புகள் ஏற்படுத்தப்பட வில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். எனவே காவிரி நிர்வாக வாரியம் அமைக்க மத்திய நீர்வள அமைச்சகத்துக்கு தாங்கள் உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தமது கடிதத்தில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications