தொழிலதிபர் ஜமால் முகமது கொலை வழக்கில் மன்னார்குடி கும்பலுக்கு நெருக்கமான வக்கீல் கைது
மதுரை: மதுரை தொழிலதிபர் ஜமால் முகம்மது கொல்லப்பட்ட வழக்கில் வழக்கறிஞர் மகேந்திரவர்மன் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மன்னார்குடி கும்பலுக்கு நெருக்கமானவர் ஆவார்.
இவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த செப்டம்பர் 2ம் தேதி மதுரையில் கடத்தப்பட்டு கொடைக்கானலில் ஜமால் முகம்மது கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகள் உள்பட இதுவரை 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலர் ஜாமினில் வெளியே வந்துள்ளனர்.
கே.எம்.அலாவுதீன் ராவுத்தர் டிரஸ்டிற்குச் சொந்தமான 1.64 ஏக்கர் காலியிடம் மதுரை புது ஜெயில் ரோட்டில் உள்ளது. இதன் மதிப்பு ரூ. 50 கோடி. இந்த டிரஸ்ட் நிர்வாகியாக ஜமால்முகம்மது சின்ன சொக்கிக்குளம் பகுதியில் வசித்து வந்தார். அவருக்கும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன. இவர் கடந்த ஆகஸ்ட் கொலை செய்யப்பட்டார்.
இவரது உடல் கொடைக்கானலில் கண்டெடுக்கப்பட்டது. இந்த கொலை வழக்கு தொடர்பாக சங்கர் மற்றும் பூங்கொடி, கணேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் சித்திக் என்பவன் சிக்கினான். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் இந்த கொலை தொடர்பாக தி.மு.க முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகள் இந்திரா அவரது உறவினரும் சகலை பழனிவேலு, கொளுந்தியாள் உமாராணி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் திருச்சி சிறையில் அடைக்கப்பட்ட இவர்களும் ஜாமீனில் விடுதலையாகியுள்ளனர். இந்த கொலைக்கு மூளையாக செயல்பட்ட வழக்கறிஞர் மகேந்திரவர்மன் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தேடிக் கொண்டிருப்பதாகக் கூறி காலம் கடத்தினர்.
காரணம், இவர் போயஸ்கார்டனை தன் வசம் வைத்துள்ள மன்னார்குடி வகையறாவுக்கு மிகவும் நெருக்கமானவர் ஆவார். இதனால் இவரை கைது செய்யாமல் போலீசார் தாமதப்படுத்தி வந்தனர்.
இந்நிலையில், ஜமால் கொலையில் அரசியல் கட்சி சம்பந்தப்பட்டு இருப்பதால் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி, அவரது உறவினர் மனைவியும், உறவினர்களும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இந்தக் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது.
மேலும் கடந்த 10 மாதங்களில் நடந்த ரியல் எஸ்டேட் கொலைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் டி.ஜி.பி.க்கு ஆணையிட்டது.
இந் நிலையில் வழக்கை கையில் எடுத்த சிபிஐ, இப்போது மகேந்திரவர்மனை கைது செய்துள்ளது.