தூத்துக்குடியில் பல ஆண்டுகளுக்கு பிறகு ரேக்ளா ரேஸ்- கிராம மக்கள் உற்சாகம்!!
தூத்துக்குடியில் பல ஆண்டுகளுக்குப் பிறகு ரேக்ளா ரேஸ் போட்டிகள் நடைபெற்றது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தூத்துக்குடி: தூத்துக்குடியில் பல ஆண்டுகளுக்கு பிறகு ரேக்ளா ரேஸ் நடைபெற்றது. எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற இவ்விழாவில் 16 மாட்டு வண்டிகள் பங்கேற்றன.
தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அருகே ஆண்டுதோறும் ரேக்ளா ரேஸ் நடப்பது வழக்கம். ஆனால் நீதிமன்ற தடை உத்தரவு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக ரேக்ளா ரேஸ் நடத்தப்படவில்லை.

இந்நிலையில் ஜல்லி கட்டு உள்ளிட்ட பல்வேறு கிராமிய போட்டிகளுக்கு புதிய சட்டம் பிறப்பிக்கப்பட்டதால் ரேக்ளா ரேஸ் நடத்த பலர் ஆயத்தமாகி வருகின்றனர். அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் பகுதியில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ரேக்ளா ரேஸ் நடத்தப்பட்டது.
இதில் மொத்தம் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 16 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. இதில் முதலிடம் பிடித்த கயத்தாறு வண்டிக்கு 10000 ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.
இரண்டாம் இடம் பிடித்த வேலங்குடி வண்டிக்கு 9000 ரூபாயும், மூன்றாம் இடம் பிடித்த பாளையங்கோட்டையை சேர்ந்த வண்டிக்கு 8000 ரூபாயும் வழங்கப்பட்டது. இதுகுறித்து கயத்தாறு பகுதியில் காளைகள வளர்ப்போர் கூறுகையில் "கடந்த 10 நாட்களாக காளைகளை போட்டிக்காக தயார் செய்து வந்தோம். நீண்ட இடைவெளிகளுக்கு பின் போட்டிகள் நடப்பது மகிழ்ச்சியை தருகிறது". இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications