திருவள்ளூரில் குடோன் சுவர் இடிந்து விழுந்து 11 கட்டிட தொழிலாளர்கள் பலி - 2 பேர் கைது
திருவள்ளூர் மாவட்டம் அலமாதி அருகே உள்ள உப்பரப்பாளையத்தில் தனியாருக்கு சொந்தமான குடோன் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் குடோனின் சுற்றுச்சுவருக்கு அருகேயே குடிசை அமைத்து வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று இப்பகுதியில் கனமழை பெய்தது. இதில் புதிதாக கட்டப்பட்ட அக்குடோனின் சுற்றுச்சுவர் இன்று காலை இடிந்து அருகிலிருந்த குடிசையின் மீது விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி ஒரு பெண் உட்பட 11 தொழிலாளர்கள் பலியானார்கள்.
தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், இடிபாடுகளில் இருந்து பலியான 11 பேரின் சடலங்களை மீட்டுள்ளனர். மேலும், குழந்தைகள் உட்பட பலர் இடிபாடுகளுக்கிடையே சிக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
5 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்டு வருகின்றனர். மீட்புப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கட்டுமான பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் அனைவரும் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.
நேற்று பெய்த மழை காரணமாகவே சுற்றுச்சுவர் இடிந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், சுற்றுச்சுவர் தரம் குறைந்து, வலுவிழந்து இருந்ததே விபத்திற்கு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
இந்நிலையில், இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள சோழவரம் போலீசார், கட்டட உரிமையாளர்களான பாலா மற்றும் ராமநாதன் ஆகியோர்களை கைது செய்துள்ளனர்.
கடந்தவாரம் சனிக்கிழமையன்று சென்னை போரூர் அருகே மவுலிவாக்கத்தில் கனமழையில் புதிதாக கட்டப்பட்டு வந்த 11 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 61 பரிதாபமாக உயிரிழந்தனர். அதன் மீட்புப் பணி இரண்டு தினங்களுக்கு முன்னர் தான் முடிவடைந்தது.
இந்நிலையில் தற்போது மீண்டும் அதே போன்று கட்டிட விபத்து ஏற்பட்டுள்ளது பலரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.