தி.மு.க. கூட்டணியில் மீண்டும் ம.தி.மு.க.- 'க்ரீன் சிக்னல்' கொடுத்த வைகோ! கருணாநிதிக்கு புகழ்மாலை!!
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் ம.தி.மு.க. இடம்பெறும் என்று கட்சி நிர்வாகிகளிடம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ உறுதியாக கூறியுள்ளார். அத்துடன் நீண்டகால இடைவெளிக்குப் பிறகு தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு கலைஞர் டிவியில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து இதனை உறுதியும் செய்துள்ளார் வைகோ.
தி.மு.க.வில் கருணாநிதியின் போர்வாளாக புகழாரம் சூட்டப்பட்டவர் வை. கோபால்சாமி என்ற வைகோ. ஆனால் 1993ஆம் ஆண்டு தம்மை கொலை செய்ய விடுதலைப் புலிகளுடன் வைகோ சதி செய்தார் என்ற குற்றச்சாட்டை கருணாநிதி முன்வைத்தார்.
இதனைத் தொடர்ந்து தி.மு.க.வில் இருந்து வைகோ வெளியேற்றப்பட்டார். அவருடன் தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் பெரும் எண்ணிக்கையில் பிரிந்து செல்ல தி.மு.க. பிளவை எதிர்கொண்டது. பின்னர் வைகோ தலைமையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் உருவானது.
அன்று ஸ்டாலினுக்காக..
தி.மு.க.வில் ஸ்டாலினைத் தலைவராக கொண்டுவருவதற்கு வைகோ தடையாக இருக்கிறார் என்ற ஒரே காரணத்துக்காக அவர் வெளியேற்றப்பட்டார் என கூறப்பட்டது. இதன் பின்னர் காலச்சக்கரம் சுழன்றது.
மீண்டும் கூட்டணியில்..
தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் ம.தி.மு.க.வும் இடம்பெற்றது. அதேபோல் அ.தி.மு.க. கூட்டணியிலும் ம.தி.மு.க. இடம்பிடித்திருந்தது. லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணிக்கும் போனது அக்கட்சி. ஆனாலும் அரசியலில் அக்கட்சிக்கு எந்த ஒரு ஏற்றமும் இல்லை.
மீண்டும் நெருக்கம்
இதனால் வரும் சட்டசபை தேர்தல் ம.தி.மு.க.வுக்கு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இத்தேர்தலில் சில தொகுதிகளில் வெல்ல வேண்டிய நிலையில் ம.தி.மு.க. இருக்கிறது. தற்போதைய நிலையில் அண்ணா தி.மு.க. அரசை கடுமையாக வைகோ விமர்சித்து வருகிறார். அதே நேரத்தில் தி.மு.கவுடன் நெருக்கம் பாராட்டியும் வருகிறார்.
க்ரீன் சிக்னல்
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் நடைபெற்ற ம.தி.மு.க. உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் வெளிப்படையாகவே, நாம் சட்டசபை தேர்தலில் தி.மு.க.வுடனே கூட்டணி; ஊருக்குச் சென்றவுடன் கட்சித் தொண்டர்களிடம் தெரிவித்துவிடுங்கள்.. உள்ளூர் தி.மு.க.வினருடன் நட்புடன் பழகுங்கள் என அறிவுறுத்தியிருக்கிறார் வைகோ.
வைகோ வாழ்த்து
இதனைத் தொடர்ந்து தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி நேற்று வைகோ வாழ்த்து தெரிவித்திருந்தார். அவரது வாழ்த்து செய்தியை தி.மு.க.வின் கலைஞர் டிவி திரும்ப திரும்ப ஒளிபரப்பியது.
வைகோ இப்படி வாழ்த்து தெரிவித்ததையும் கலைஞர் டிவியில் ஒளிபரப்பிக் கொண்டிருந்ததையும் ம.தி.மு.க.வும் சமூக வலைதளங்களில் அதிகாரப்பூர்வமாக பகிர்ந்து கொண்டதுடன், 'திமுக-மதிமுக' தொண்டர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளதாகவும் பதிவு செய்தது.
இதனால் தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. இடம்பெற இருப்பது உறுதி செய்யப்பட்ட ஒன்றாகவே இரு கட்சி நிர்வாகிகளும் கூறி வருகின்றனர்..