லோக்சபா தேர்தலில் போட்டியிட மாட்டேன்: கே.வி. தங்கபாலு அறிவிப்பு
சென்னை: லோக்சபா தேர்தலில் தாமும் போட்டியிடப் போவதில்லை என்று தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக தங்கபாலு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
தமிழகத்தில் வருகிற லோக்சபா தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுவினை சேலம் உள்ளிட்ட எந்த தொகுதிக்கும் அளிக்கவில்லை. மூன்று மாவட்ட தலைவர்கள் தாங்களாகவே இந்த மனுக்களை அளித்துள்ளனர்.
2011 சட்டசபை தேர்தல் முடிவுகள் வந்த பிறகு தார்மீக பொறுப்பேற்று தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகி அகில இந்திய காங்கிரஸ் தலைவருக்கு கடிதம் அனுப்பினேன். உள்கட்சி தேர்தல் நடத்த வேண்டும் என்றும் வரும் சட்டசபை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது இல்லை என்றும் தலைமைக்கு தெரிவித்து இருக்கிறேன்.
தேர்வு குழு தலைவர் குலாம் நபி ஆசாத், பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக் போன்றோரிடம் மீண்டும் தனது நிலைப்பாட்டை தெரிவித்து உள்ளேன்.
தொடர்ந்து ஒருவரே தொகுதியில் போட்டியிடுவதற்கு பதிலாக புதியவர்கள், தொண்டர்களால் ஏற்றுக் கொள்ளப்படுவார்கள். அவர்களே வேட்பாளர்களாக அந்தந்த தொகுதியில் நியமனம் பெற வேண்டும் என்ற என் விருப்பத்தை தலைமையிடம் தெரிவித்து உள்ளேன். தலைமை தேர்வு செய்யும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிர பிரசாரம் செய்வேன்.
இவ்வாறு தங்கபாலு தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க எந்த ஒரு கட்சியும் தயாராக இல்லாத நிலையில் ஏற்கெனவே ஜி.கே.வாசன் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்திருந்தார். இந்நிலையில் கே.வி. தங்கபாலுவும் போட்டியிடமாட்டேன் என்று அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.