பெரியசாமி.. சமீப காலத்தில் ஜெ.வைத் தொடர்ந்து எம்பார்மிங் செய்யப்படும் 2வது அரசியல் தலைவர்!
திமுக மாவட்ட செயலாளர் என்.பெரிசாமியின் உடல் எம்பார்மிங் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: திமுக மாவட்ட செயலாளர் என்.பெரியசாமி இன்று காலை சென்னை தனியார் மருத்துவமனையில் காலமானார். அவரது உடல் எம்பார்மிங் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக தலைவர் கருணாநிதியின் நெருங்கிய நண்பரும், தூத்துக்குடி மாவட்ட திமுக செயலாளருமான என்.பெரியசாமி சென்னை போரூர் ரராமச்சந்திரா மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானர்.
அவரது உடலுக்கு நாளை மறுநாள் ஞாயிற்றுக் கிழமையன்று இறுதிச்சடங்கு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. என்.பெரியசாமியின் உடல் எம்பார்மிங் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெ.வுக்கு செய்யப்பட்ட எம்பார்மிங்
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகுதான் எம்பார்மிங் என்ற வார்த்தை பிரபலமானது. ராஜாஜி ஹாலில் ஜெயலலிதாவின் பூத உடல் கிடத்தி வைக்கப்பட்டிருந்த போது அவரது கன்னத்தில் 4 புள்ளிகள் காணப்பட்டன.
ஜெ கன்னத்தில் இருந்த புள்ளிகள்
ஏற்கனவே ஜெயலலிதா மரணத்தில் ஏகப்பட்ட மர்மங்கள் நீடிப்பதாக கூறப்பட்ட நிலையில் அவரது கன்னத்தில் காணப்பட்ட இந்த புள்ளிகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதேநேரத்தில் 70 நாட்களுக்கும் மேலாக மருத்துவமனையில் இருந்தவரின் உடல் எப்படி கொஞ்சமும் சோர்வடையாமல் எடை குறையாமல் உள்ளது என்ற கேள்விகளும் எழுந்தன.
கெடாமல் இருக்க..
இதையடுத்து இதுகுறித்து விளக்கமளித்த மருத்துவத்துறை அவரது உடல் எம்பார்மிங் செய்யப்பட்டதாக கூறியது. இறந்தவர்களின் முகம் மற்றும் கைகள் போன்ற பகுதிகள் பளிச்சென்று இருக்கவும்.. அடக்கம் செய்யும் நேரம் வரையிலும் கெடாமல் இருக்கவும் செய்யப்படுவதுதான் 'எம்பாமிங்' என்றும் விளக்கமளித்தது.
பொலிவுடன் இருக்க
எம்ஜிஆருக்கு எம்பார்மிங் செய்யப்படவில்லை. ஆனால் ஏற்கனவே பியூட்டி கான்ஷியஸ் அதிகம் கொண்ட ஜெயலலிதாவின் முகத்தை மக்கள் பார்க்கும் போது அதே தோற்றப் பொலிவு இருக்க வேண்டும் என்பதற்காக எம்பார்மிங் செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டது.
இரண்டாவது தலைவர்..
இந்நிலையில் தற்போது காலமாகியுள்ள தூத்துக்குடி மாவட்ட திமுக செயலாளர் என் பெரியசாமியின் உடலும் எம்பார்மிங் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவைத் தொடர்ந்து சமீபகாலத்தில் எம்பார்மிங் செய்யப்படும் இரண்டாவது பெரியத் தலைவர் என் பெரியசாமி என்பது குறிப்பிடத்தக்கது.