வாஜ்பாய் அரசிலும் இணையமைச்சர்.. இப்போதும் இணையமைச்சர்- இது பொன். ராதாகிருஷ்ணன்
சென்னை: மோடி அமைச்சரவையில் தமிழகத்திற்கு ஒரேயொரு இணை அமைச்சர் பதவி மட்டும் கிடைத்துள்ளது. அந்த பதவி பாஜகவின் தமிழக தலைவர் பொன். ராதாகிருஷ்ணனுக்கு கிடைத்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் 37 தொகுதிகளை அதிமுக கைப்பற்றியது. மீதமுள்ள 2 தொகுதிகளை பாஜக மற்றும் பாமக கைப்பற்றியது. ஆக தமிழகத்தில் பாஜக கன்னியாகுமரி தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. குமரியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பாஜக மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணனுக்கு(62) மோடியின் அமைச்சரவையில் இடம் கிடைத்துள்ளது.
அவருக்கு இணை அமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.

ராதாகிருஷ்ணன்
இணை அமைச்சராக திங்கட்கிழமை மாலை பதவியேற்றுக் கொண்ட பொன். ராதாகிருஷ்ணனுக்கு கனரக தொழில் மற்றும் பொது நிறுவனங்கள் துறை இன்று ஒதுக்கப்பட்டுள்ளது.

2வது முறை
பொன். ராதாகிருஷ்ணன் தமிழக பாஜகவின் தலைவராக இரண்டு முறை தேர்வு செய்யப்பட்டவர். தற்போது அவர் இரண்டாவது முறையாக பாஜக மாநில தலைவராக உள்ளார்.

வாஜ்பாய் அரசு
வாஜ்பாய் அரசில் ராதாகிருஷ்ணன் இளைஞர்கள் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை இணை அமைச்சராக இருந்தார். அதன் பிறகு அவர் நகர்ப்புற மேம்பாடு மற்றும் வறுமை ஒழிப்பு, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை இணை அமைச்சராக இருந்தார்.

வழக்கறிஞர்
ராதாகிருஷ்ணன் 1999ம் ஆண்டு நாகர்கோவில் தொகுதியில் இருந்து முதன்முதலாக தேர்வு செய்யப்பட்டார். திருமணமாகாத அவர் ஒரு வழக்கறிஞர் ஆவார்.

நாடார்
நாகர்கோவிலில் உள்ள ராமவர்மபுரத்தில் வசித்து வரும் பொன். ராதாகிருஷ்ணன் நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

வானதி வாழ்த்து
இணை அமைச்சராக பதவியேற்றுக் கொண்ட பொன். ராதாகிருஷ்ணனுக்கு பாஜக நிர்வாகி வானதி சீனிவாசன் பூங்கொடுத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications