விஜயகாந்த் 3 வது முறையாக சிங்கப்பூருக்கு போனது ஏன் தெரியுமா?
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த், தனது மனைவி பிரேமலதாவுடன் திடீரென்று சிங்கப்பூர் புறப்பட்டு சென்றுள்ள சம்பவம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. விஜயகாந்த் கடந்த ஒன்றரை ஆண்டு காலத்தில் மூன்றாவது முறையாக சிங்கப்பூர் பயணம் மேற்கொண்டுள்ளார்.
விஜயகாந்த் கடந்த 26-ம் தேதி திமுக தலைவர் கருணாநிதி, தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், மாநில பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்களை திடீரென சந்தித்துப் பேசினார்.

பிரதமருடன் சந்திப்பு
கடந்த 27ஆம் தேதி எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் பிரதி நிதிகளுடன் டெல்லி சென்று, பிரதமர் மோடியை சந்தித்து தமிழகப் பிரச்சினைகள் குறித்து மனு அளித்தார்.

அரசியலில் பரபரப்பு
மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அருண் ஜேட்லி, நிதின் கட்கரி ஆகியோரை விஜயகாந்த், பிரமேலதா, சுதீஷ் ஆகியோர் தனியாக சந்தித்துப் பேசினர். விஜயகாந்தின் இந்த திடீர் அரசியல் நடவடிக்கைகள் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தின.

திடீர் சிங்கப்பூர் பயணம்
இந்நிலையில் நேற்று காலை 10.30 மணிக்கு விஜயகாந்த் திடீரென சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றார். அவருடன் பிரேமலதாவும் சென்றுள்ளார்.

மூன்றாவது முறையாக பயணம்
விஜயகாந்த் தனது மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றுள்ளதாக தேமுதிக வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த ஆண்டும் பிப்ரவரி, ஜூலை மாதங்களில் அவர் சிங்கப்பூர் பயணம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கூட்டணி பேச்சுவார்த்தையா?
சட்டசபை தேர்தலுக்காக கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடைபெற உள்ள நிலையில் மாநிலம் முழுவதும் விஜயகாந்த் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இதற்காக புத்துணர்வு ஏற்படுத்தும் வகையில் சிகிச்சைக்காக அவர் சிங்கப்பூர் பயணம் மேற்கொண்டிருக்கலாம் என்றும் தேமுதிக வட்டாரா தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications