அக்னி நட்சத்திரம் 28ல் முடிவு - கொளுத்தும் வெயிலோடு ஆங்காங்கே கோடை மழை
அக்னி நட்சத்திரம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் வெப்பம் அதிகரித்துள்ளது, ஆங்காங்கே கோடை மழையும் பெய்து வருகிறது.
சென்னை : அக்னி நட்சத்திரம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கடல்பகுதியில் இருந்து ஈரப்பதம் உள்ள காற்று வீசத் தொடங்கியுள்ளது. ஒரு பக்கம் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் ஆங்காங்கே கோடை மழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் சில இடங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அக்னி நட்சத்திரம்
அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் காலம் மே 4ஆம் தேதி தொடங்கியது. 28ஆம் தேதி ஞாயிறு உடன் முடிவடைகிறது. முதல் ஒரு வாரம் வெயில் தணிந்தே காணப்பட்டது. அப்புறம் அனல் வெயில் ருத்ரதாண்டவமாடியது.

அனல் காற்று
ஆந்திராவில் இருந்து வீசிய அனல் காற்று வடமாவட்டங்களில் வீசியது. கடந்த இரு வாரங்களாக வெயில் பெரும்பாலான இடங்களில் அதிக அளவில்தான் இருந்தது. திருத்தணியில் நேற்று 108 டிகிரி வெயில் கொளுத்தியது.

சதமடித்த வெயில்
வேலூர் 106 டிகிரி, கரூர் பரமத்தி 104 டிகிரி, காரைக்கால் 100 டிகிரி, கடலூர், நாகப்பட்டினம், புதுச்சேரி, பாளையங்கோட்டை, பரங்கிப்பேட்டை, திருச்சி 102 டிகிரி வெயில் நீடித்தது. தெலங்கானாவில் இன்று அனல் காற்று வீசும் என்பதால் தமிழகத்தின் வட மாவட்டங்களில் சில இடங்களில் அனல் காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்பச்சலனம்
தமிழகத்தில் நிலவும் வெப்பம் அதிகரித்து வருவதன் காரணமாக வெப்ப சலனம் ஏற்பட்டு வங்கக் கடல் பகுதியில் வளி மண்டல மேலடுக்கில் காற்று சுழற்சி ஏற்பட்டுள்ளது. இது தமிழக கடலோரப் பகுதியில் புதுச்சேரி முதல் மன்னார் வளைகுடா வரை பரவியுள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் இன்று சில இடங்களில் மழை பெய்யும்.

ஈரக்காற்று
அக்னி நட்சத்திரம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கடல்பகுதியில் இருந்து ஈரப்பதம் உள்ள காற்று வீசத் தொடங்கியுள்ளது. மேலும் வெப்ப சலனம் காரணமாக வளி மண்டல மேலடுக்கில் காற்று சுழற்சி உருவாகியுள்ளது. அதனால் தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்துள்ளது.












Click it and Unblock the Notifications